பக்கம் எண் :

வள்ளுவர் கோட்டம்185

கொடியஒரு பாவியவன் யாழ்ப றித்தான்
       குமுறியழ முகாரிப்பண் பாடு கின்றான்.

தமிழ்வானில் வட்டமிட்டுச் சுற்றிச் சுற்றித்
       தனக்குநிகர் இல்லைஎனப் பாடிப் பாடி
அமிழ்தனைய இசைபரப்பி நம்மை எல்லாம்
       அகமகிழச் செய்ததொரு வானம் பாடி;
இமிழ்கடலுக் கப்பாலும் பறந்து சென்றே
       இனியதமிழ் பாடிவரக் கண்டு வந்தோம்;
உமிழ்சினத்துக் காலனெனும் வேடன் கண்டான்;
       ஒருசிறிதும் இரக்கமிலான் வீழ்த்தி விட்டான்.

வித்தாகி முளையாகிக் கழனி யெங்கும்
       விளைகின்ற பயிராகிச் செழித்து நல்ல
கொத்தாகிப் பயனாகிக் கூடுங் காலை
       கொள்பயனைச் சிதைத்தானோர் கொடிய பாவி;
பித்தாகித் திரிகின்றோம் துன்ப மென்னும்
       பேராழி மூழ்குகின்றோம்; தமிழர் வாழ்வின்
சொத்தாகி வந்தானை அண்ணா என்னும்
       சொல்லுக்கே உரியானைப் பறித்தான் அம்மா!

அறப்போர்கள் பலமுடித்தான் ஆட்சி பெற்றான்
       அன்பொன்றே மனத்தமைத்தான்; அந்த ஆட்சிச்
சிறப்பாலே முதலமைச்சன் ஆனான் அண்ணன்;
       செந்தமிழர் நற்றவமென் றிருந்தோம்; ஆனால்
இறப்பாலும் முதலமைச்சன் ஆனான் அம்மா!
       இத்துயரை எவரிடம்சென் றாற்றிக் கொள்வோம்?
மறப்பெனும் மருந்தாலும் மாறா தந்தோ!
       மனமென்னும் ஒன்றனைநாம் பெற்ற தாலே.

செந்தமிழ்க்கும் புலவர்க்கும் விடிவு காலம்
       சிறந்ததொரு பொற்காலம் மீண்டும் இங்கு