பக்கம் எண் :

186கவியரசர் முடியரசன் படைப்புகள் - 6

வந்திருக்க வழியுண்டென் றெண்ணி எண்ணி
       மகிழ்ச்சியெனுங் கடலுக்குள் விரைந்து சென்றோம்
உந்திஎழும் கற்பனையாம் படகில் வந்தோம்
       ஒளிவிளக்காம் கரைவிளக்கம் அணைந்த தந்தோ!
நொந்திருக்கும் துயர்க்கடலுள் வீழ்ந்து விட்டோம்;
       நோவகற்றக் கைகொடுக்க வருவார் யாரே?

திருக்குறளாம் தெளிதேனைச் சங்கம் தந்த
       தீங்கனியாம் இலக்கியத்தைத் துய்த்துத் துய்த்துத்
தெருக்களெலாம் தமிழ்முழக்கம் செய்து நின்றாய்!
       தேயமெல்லாம் தமிழோசை பரவச் செய்தாய்!
உருத்தெழுவாய் தமிழுக்குத் தீங்குண் டென்றால்!
       உவந்திடுவாய் தாய்மொழிக்கோர் ஆக்கங் கண்டால்!
இருக்கின்ற தமிழ்ப்பணியை விட்டுச் செல்ல
       எவ்வண்ணம் மனத்துணிந்தாய்? அண்ணா அண்ணா!

பழகுதமிழ் நிலையுயரப் பாடு பட்ட
       பண்பாளர் தமிழ்ப்புலவர் உருவை எல்லாம்
அழகியநற் சிலைவடிவில் படைத்துப் போற்றி
       ஆழிநெடுங் கரையருகே வரிசை செய்தாய்!
தொழவுரியர் சிலையருகே நீயும் சென்று
       தூயவனே நிலையாக அமர்ந்து விட்டாய்!
பழையதமிழ் நிலையுணர்ந்து பாடங் கேட்கும்
       பற்றாலே அவ்வண்ணம் அமர்ந்தாய் கொல்லோ?

மணப்பாட்டின் ஒலிகேட்க அறுபான் ஆண்டு
       மணித்திருநாள் நினக்குவரும் அந்நாள் என்றன்
மணிப்பாட்டை நின்னடிக்குப் படைப்பேன் என்று
       மனக்கோட்டை கட்டிவைத்து மகிழ்ந்தி ருந்தேன்;
பிணப்பாட்டுப் பாடவைத்து மறைந்தாய் அண்ணா
       பேச்சாலே கோட்டை தனைப் பிடித்தாய் என்றன்
மனக்கோட்டை மூச்சாலே இடித்தாய்! இந்த
       மனவேறு பாடெதற்குக் கொண்டாய் ஐய!