பக்கம் எண் :

வள்ளுவர் கோட்டம்187

பண்பாடு பண்பாடென்று றுரைத்து ரைத்துப்
       பகைதழுவும் நெஞ்சத்தார் தம்மை யும்போய்
நண்போடு தழுவியநற் கைகள் எங்கே?
       நலமிக்க ஒளிவிளக்காய் வந்த கோவே
கண்பாடு கொண்டனையே கல்ல றைக்குள்;
       காரணமென்? அரசியலில் நீநி னைத்த
பண்பாடு காணாத ஏக்கத் தாலோ?
       பகறியழ எமைவிடுத்துச் சென்று விட்டாய்!

விடுதலைநாள் சுதந்திரத்தின் திருநாள் தன்னை
       வீரத்தின் தியாகத்தின் திருநாள் என்றாய்;
அடிமையென ஆக்கிவைத்தோர் கணக்கைத் தீர்த்த
       அரியதொரு நாளென்றாய் நாற்பத் தேழை;
உடைமைஎன வரவேட்டில் கணக்குப் பார்க்கும்
       உவமைமிகு நாளென்றாய் அறுபத் தேழை;
கடமையினை நன்கியற்றி நின்றோய்! ஏனோ
       கணக்கொன்றும் பாராது மூடி விட்டாய்?

பெரும்புரட்சிக் கருத்தெல்லாம் பேசி நிற்பாய்!
       பேச்சொன்றே கேட்டிருந்தோர் அஞ்சி, நின்னை
இரும்புளத்து மனிதனென எண்ணி நாட்டில்
       ஏதேதோ விளைந்துவிடும் என்றி ருந்தார்;
கரும்புளத்து மென்மையினை மேன்மை தன்னைக்
       காட்டினைநீ குடியாட்சிப் பண்பு காட்டி;
பெருங்குணத்தைக் கண்டபினர்; அஞ்சி நின்ற
       பேணாரும் நின்நட்பை விழைந்து வந்தார்.

அரசியலைத் திறமுடனே நடத்த வல்லார்,
       அண்ணாநீ தோற்றுவித்த கட்சி தன்னை
உரமுடனே வளர்க்கவல்லார் தோன்ற லாகும்;
       உன்போலப் பாசத்தை வளர்த்துப் போற்றி