பக்கம் எண் :

வள்ளுவர் கோட்டம்189

34
அடக்கத்தை அடக்கம் செய்தோம்

படைவலியால் வடபுலத்தைச் சேர வேந்தன்
       பகையாக்கிப் பணிவித்தான்; நீயோ பேச்சு
நடைவலியால் நட்பாக்கிப் பணிய வைத்தாய்!
       நாவலனே! ‘மன்பதையைக் காக்கும் கொற்றக்
குடையுடைய குடிப்பிறத்தல் துன்பம்’ என்று
       குட்டுவனும் தெளிந்துரைத்தான்; புலவர் பாட்டுத்
தொடையுடையாய் ‘முதலமைச்சன் எனினும் நானோர்
       சூழ்நிலையின் கைதி’ என நீயும் சொன்னாய்.

‘அன்றுமுதல் இன்றுவரை தோழர் என்னை
       அண்ணாவென் றழைக்கின்றார்; அமைச்ச ரான
இன்றென்னை ஒருசிலரும் அண்ணா என்பார்;
       இரண்டுக்கும் இடையிலுள வேறு பாட்டை
நன்றுணர்வேன்’ என்றுரைத்தாய்; ‘அமைச்ச ராகி
       நாடாளும் பொறுப்பேற்றேன் இன்றும் தோழன்
அன்றுதரும் நிலைபோல வெண்பொன் ஒன்றே
       அளிக்கின்றான்; மதிக்கின்றேன் மகிழ்வுங்கொள்வேன்.

‘நாடாள வந்தபினர் நூறு நூறு
       நான் தருவேன் நான் தருவேன் என்று செல்வர்
ஓடோடி வருகின்றார்; ஏழை தந்த
       ஒருவெண்பொன் என்னுடலிற் குருதி யாகும்;
மேடாளும் செல்வர்தரும் வெண்பொன் நூறும்
       மெய்ப்பூசும் சந்தனமாக் கொள்வேன்’ என்றாய்;
ஊடாடும் பொருள்நயத்தை எளியோர் தம்பால்
       உனக்கிருக்கும் அன்புளத்தைக் காட்டி நின்றாய்.