37 அண்ணா பேசினார் ஆண்டுகள் ஐம்பதின் அப்பாலே ஓரைந்து தாண்டியவன் நானெனினும் தள்ளாமை கண்டதிலை; என்றும் இளைஞனென ஏறுநிகர் காளைஎன ஒன்றும் உணர்வுடைய உள்ளம் உடையவன் நான்; என்றாலும் வெண்மை எனது தலைமுடியில் நன்றே படர நலமிக்க என்னுளத்தைச் சொல்ல முடியாத் துயரொன்று கவ்வியது நல்ல இளமை நமைவிட்டு நீங்கிடுமோ? வேண்டா முதுமைவரும் வேளை நெருங்கிடுமோ? தீண்டாமல் போகாதோ? தேய்ந்திடுமோ நம்இளமை? என்றொருநாள் என்மனையில் ஏங்கித் தனித்திருந் தொன்றும் இமைமூடி ஓய்ந்து தளர்ந்திருந்தேன்; ஆழ்கடலின் மேற்புறத்தே ஆர்த்துக் கரைகடக்க நீள்கரையில் மோதி நிமிர்ந்தெழுந்த பேரலைகள் ஓரக் கரைகடக்க ஒண்ணாமல் மீளுங்கால் நேருமொலி என்செவியில் நீங்கா தொலிசெய்ய, வீசிவெருங் காற்று விளையாடி இன்பத்தைப் பூசி எனதுடலில் பூரிப்புச் செய்திருக்கச் சென்னைக் கடற்கரையின் சீரெழிலை நோக்கியவா றென்னை மறந்தங் கினிதே நடந்துவந்தேன்; வாழும்நாள் எல்லாம்நம் வாழ்வுக்கே நாவசைத்தோன் நாளும் கடலலையாம் நாவதனால் தாலாட்டப் பேசாமல் சந்தனப் பேழைஎனுந் தொட்டிலிலே |