பக்கம் எண் :

196கவியரசர் முடியரசன் படைப்புகள் - 6

ஆசான் நெடுந்துயிலில் ஆழுங் கரையோரம்
வந்தேன் உடல்சிலிர்த்தேன் வாடிவரும் என்னுளத்தில்
செந்தேன் துளிர்த்ததுபோற் செம்மாந்து நின்றேன்நான்;
அண்ணாஎன் அண்ணாஎன் றார்த்தேன்; அருள்பொழியும்
கண்ணான்என் கண்முன்னே காட்சி தரநின்றான்;
வாமன்னா என்று வணங்கித் தலைநிமிர்ந்தேன்;
‘பாமன்னா வாழ்க’ எனப் பையச் சிரித்திருந்தான்;
மெல்லச் சிரித்தாய்நீ மேலோய்நின் வாய்ச்சிரிப்புச்
சொல்லும் பொருள்தெரியச் சொல்லிடுக என்றேன்நான்;
‘உன்னைத்தான் தம்பி உயிர்போல் நினைந்திருந்தேன்
என்னைத்தான் நம்பி இருந்தாய் நீ உண்மையிது;
மண்ணுலகில் வாழுங்கால் என்னை மதித்துவந்தாய்
கண்மணிபோல் உன்னைக் கருதி மகிழ்ந்தேன்நான்;
என்னோ டிணைந்துநீ ஏற்ற துயரெல்லாம்
எந்நாளும் எண்ணி இறுமாப் படைகின்றேன்;
பூண்ட அறப்போர்கள் புக்க சமர்க்களங்கள்
மீண்டும் நினைத்தாலே மேனியெலாம் புல்லரிக்கும்!
தம்பி யுடையான் படைக்கஞ்சான் என்றிருந்தேன்
நம்பி யதுபோல நாளெல்லாம் வென்றுவந்தாய்!
வென்றுவந்த நீயின்று வேறு நினைவுகளைத்
துன்றிவர விட்டுத் துவள்கின்றாய்! நாடோறும்
உன்னை நினைந்தே உளம்நொந்தாய்! உன்னிளமை
தன்னை நினைந்தும் தணியாத் துயர்கொண்டாய்!
ஆளடிமை செய்யாமல் ஆண்ட இனத்தவன்நீ
வாளுடைய தோளுயர்த்தி வட்டமிட்டுப் போர்முழுதும்
வெற்றிக் கொடிநாட்டி வீரப் புகழுயர்த்திச்
சுற்றித் திரிந்தவன்நீ சோர்ந்து கிடப்பதுவோ?
நாட்டை நினைந்தாயா? நாடாண்ட உன்னினத்தின்
பாட்டை நினைந்தாயா? பாடகலக் கேடகலத்
தன்னாட்சி பெற்றுயரச் சற்றும் நினைந்தாயா?
உன்னாட்சி பெற்றிங் குயர நினைந்தாயா?
சாதி தொலைத்தாயா? சாத்திரக் குப்பைகளை