பக்கம் எண் :

வள்ளுவர் கோட்டம்203

உடையவழி, உறுதிவழி, மானங் காக்க
       உற்றவழி, குறள்நூலின் சங்க நூலின்
இடைமருவும் தமிழர்வழி, காஞ்சிக் கோமான்
       எந்நாளும் எடுத்துரைத்த வழியாம் கண்டீர்.

துப்பாக்கி துணையென்று சொன்ன தில்லை;
       துணிவுளமே துணையென்று மொழிந்து நின்றார்;
தப்பாக்கும் எவ்வழியும் நினைந்த தில்லை;
       தன்மானம் தமிழுணர்வு தன்னம் பிக்கை
வைப்பாக்கிக் கொள்வதுதான் தமிழி னத்தை
       வாழ்விக்கும் வழிஎன்றார்; புகழ்ந்து சான்றோர்
*செப்பாக்க வழியொன்றே சொல்லித் தந்தார்
       **சேப்பாக்க வழித்துயிலும் அறிஞர் கோமான்.

அல்வழியில் தமிழினத்தை அழைக்க வில்லை
       அருவருக்கும் வேற்றுமையை வளர்க்க வில்லை
நல்வழியே ஒன்றமைத்தார் அதனைக் காட்டி
       நம்பிவந்த தம்பியரை அழைத்துச் சென்றார்
கல்வழியோ முள்வழியோ காட்ட வில்லை
       காட்டுவழி மேட்டுவழி காட்ட வில்லை
கொல்வழியும் சொன்னதில்லை யாரும் ஏற்றுக்
       கொள்வழியே உரைத்திருந்தார் தலைவர் கோமான்.

கருப்புக்கு மறுப்புரைத்துப் பகைமை பூண்ட
       கருத்தினரும் வந்தவழி, குழப்பம் செய்து
வெறுப்புற்றுத் திரிந்தவரும் மனம்தி ருந்தி
       விழைந்தவழி, முதல்எதிரி என்று சொல்லி
செருக்குற்று நின்றவரும் முதலில் வந்து
       சேர்ந்தவழி, செம்மைவழி, எங்கள் அண்ணன்
உருக்கொடுத்துத் தந்தவழி, பெரியார் பட்ட
       உழைப்பாலே உருவான வழியே யாகும்.


* செப்பாக்க வழி - செப்பும் ஆக்க வழி **சேப்பாக்கம் - அண்ணா கல்லறை அமைந்திருக்கும்.