பக்கம் எண் :

204கவியரசர் முடியரசன் படைப்புகள் - 6

அழகுநடைத் தமிழ்எழுதிப் புதிய பாங்கில்
       அணிவகுத்து நடப்பதற்கு வழிய மைத்தார்;
பழகுதமிழ் நடைபேசிப் பாரோர் போற்றும்
       படையொன்று நடைபோட வழிய மைத்தார்;
மழலைமொழி நடையினரும் கற்றுக் கற்று
       மாவீரர் போல்நடந்தார் வெற்றி கண்டார்;
விழலனைய மனிதர்களும் எழுதிப் பேசி
       வீறுபெறும் நடைபெற்றார் வாழ்வும் பெற்றார்.

‘தூற்றாதீர் பிறர்பழியை, மேடை ஏறித்
       தொடுக்காதீர் வசைமொழியைக் காசுக் காக
மாற்றாதீர் தமிழ்மரபை, கருத்தை மட்டும்
       மறுத்துரைப்பீர், தனிஒருவர்ப் பழித்தல் வேண்டா,
மாற்றாரின் தோட்டத்து மல்லி கைக்கும்
       மணமுண்டு தெரிந்ததனை நுகர்க’என்று
சாற்றிஒரு பண்புவழி காட்டி நின்று
       தமிழினத்தை வளர்க்கும்வழி உணர்த்தி நின்றார்.

புரட்சிவழி எனச்சொல்லி உணர்ச்சி யூட்டிப்
       புன்மைவழி அமைக்கவில்லை; மக்கள் நெஞ்சில்
மருட்சிபெறச் செய்யவில்லை; பகைத்தோர் கூட
       மனத்துக்குள் ஏற்கின்ற வழியே சொன்னார்;
கருத்துவழி, அறிவுவழிப் புரட்சி செய்தார்;
       களப்புரட்சி கொலைப்புரட்சி செய்தா ரல்லர்;
தரத்திலுயர் புரட்சிவழி, தன்னைத் தானே
       தருகின்ற அறத்துவழி ஒன்றே கண்டார்.

அண்ணாவின் வழியில்தான் செல்லுகின்றோம்
       அல்லல்பல வந்தாலும் அயர மாட்டோம்;
புண்ணாகப் பழிமொழிகள் வீசும் போதும்
       பொழுதெல்லாம் சோதனைகள் வந்தபோதும்