வண்ணம்போல் யாரும் வடிக்க இயலாது; வஞ்சத்தார் என்னென்ன வைதாலும் தாங்குகிற நெஞ்சத்தான் நம்அண்ணன் நின்றநிலை மாறவில்லை; வாடி வதங்கவில்லை வாய்த்தஒரு போர்க்களத்தில் ஓடி ஒளியவில்லை ஊக்கங் குறையவில்லை; மற்றவரைப் பாராட்டி வாயாரப் போற்றுவான் மற்றோர் தனைப்புகழ்ந்தால் மங்கையர்போற் கூசுவான்; ஆவிக்குள் ஆவியென ஆகிக் கடற்கரையில் மேவித் துயில்கொள்ளும் மேலோனைத் தூற்றுகிறான்; தாயைப் பழிக்கத் தயங்காத மாபாவி வாயைத் திறந்தின்னும் வைதே திரிகின்றான்; ‘பொய்யை முதலாகப் போட்டே அரசியலைச் செய்யுந் தலைவ’னெனச் செத்தபினும் திட்டுகிறான்; பொய்யில் பிறந்தமனம் பொய்யில் வளர்ந்த உடல் பொய்யால் வளர்உருவம் புத்தனையா ஏசுவது? அண்ணாவை மிஞ்சிவிட்டார் ஆரூர்க் கலைஞரெனப் பண்ணால் முடிபோட்டுப் பாடுகிறான் பாடட்டும்; அண்ணா அமைத்த அருமைக் கழகத்தைக் கண்போற் கலைஞரவர் காக்கும் கழகத்தைச் சைத்தான் எனப்புகன்று சாக்கடையில் வந்தமொழி வைத்தான் நமக்கெதிரில் வாய்மூடி நிற்கின்றோம்; தன்னலத்தால் இற்றைத் தலைவருக்குப் பூமாலை சொன்னலத்தால் சூட்டுகிறான் சூட்டட்டும் வாழட்டும்; ஆனால் கழகத்தை அப்பேதை வாய்புளிக்க ஏனோ பழிக்கின்றான்? ஈதென்ன விந்தை! கலைஞர் இனிப்பாம் கழகம் கசப்பாம் நிலைபுரிய வில்லைஎன் நெஞ்சம் பொறுக்கவில்லை; பேதைத் தனமென்று பேசா திருப்பதா? போதைச் செயலென்று பூனைபோல் நிற்பதா? |