பக்கம் எண் :

22கவியரசர் முடியரசன் படைப்புகள் - 6

யாதும் அறியாமல் *ஆகுலங்கள் செய்கின்றார்;
மாசகற்றி வையத்துள் வாழ்வாங்கு வாழ்வதற்கோர்
ஆசையுற்று நல்ல அறநெறியில் நிற்கவிலை;
மாந்தர் எனைமறந்தார் வாய்மைக் குறள்மறந்தார்
போந்த நெறியெல்லாம் போய்ப்புகுந்தார்; இன்னுங்கேள்
*இம்மைப் பயன்துய்க்க எண்ணும் மனிதருக்குச்
செம்மைப் படுத்திச் சீரான நன்னெறிகள்
எத்துணையோ சொன்னேன் எனினுமவர் கேட்டிலராய்ப்
பித்தரைப்போல் இவ்வுலகில் பேதுற் றலைகின்றார்;
பத்துக் குறளால் பகவன் இயல்பனைத்தும்
நத்தும் படியுரைத்தேன் நல்ல நெறிவகுத்தேன்
எள்ளளவும் அந்நெறியை ஏற்று நடக்காமல்
பிள்ளைகள்போல் இன்னும் பிழைபடவே செய்கின்றார்;
கல்லாலும் செம்பாலும் காசுமணிப் பொன்னாலும்
இல்லா உருவம் இறைவனுக்குத் தந்தார்
சிலையாகச் செய்தார் சிறப்பெடுத்துப் போற்றும்
கலையாகச் செய்தார் கடவுட்பேர் தந்தார்
நிலையாகக் கோவிலுக்குள் நிற்கவைத்தார்; ஆனால்
விலையாக ஊர்கடத்தும் வேலையிலும் ஈடுபட்டார்;
உள்ளத்தில் ஆண்டவனை ஓர்சிறிதும் எண்ணாமல்
கள்ளத் தனமாகக் கடல்கடத்திச் செல்கின்றார்;
பாயிரத்தின் முன் சொன்ன பண்பை மறந்துவிட்
டாயிரந் தெய்வங்கள் ஆக்கிப் படைத்துத்
திருடிப் பிழைக்க திருநீறும் பூசிக்
குருடர் உலகமெனக் கூத்தாட்டம் ஆடுகின்றார்;
மக்கள் படுதுயரை மாநிலத்துக் கண்டுணரத்
தக்க அறிவிலராய்த் தாம் மட்டும் வாழ்கின்றார்;
மற்றோரை வாழ்வித்துத் தாமுமிங்கு வாழுமனம்
அற்றோர்பால் நெஞ்சுருகும் அன்புநெறி காண்பதெங்கே?
அன்புநெறி இல்லையெனில் ஆருயிரைத் தன்னுயிர்போல்
எண்ணும் அருள்நெறிதான் எங்கே தழைத்துவரும்?
நல்வழிகள் காட்டவரும் நாளிதழ்கள் மங்கையரை


*இம்மைப் பயன் - இவ்வுலக இன்பம்