பக்கம் எண் :

வள்ளுவர் கோட்டம்25

வெவ்வினைகள் எவ்வளவோ! அடடா அந்த
       விளையாட்டின் திறமெல்லாம் விளம்ப எண்ணின்
அவ்வளவும் சொல்வதற்கு வள்ளு வற்கும்
       அடங்காது போய்நிற்கும் அவனும் தோற்பான்.

உலகியலின் கூறெல்லாம் ஆய்ந்து ணர்ந்தோன்,
       ஒப்பற்ற பேரறிஞன், முப்பால் சொல்லி
இலகுபுகழ் கொண்டொளிரும் ஆசான், வாழ்வை
       இன்பமென எடுத்துரைத்தான்; அதனை விட்டு
விலகுநெறி தனிற்புகுந்தோம் மாயம் என்ற
       வெற்றுரையை நம்புகின்றோம் அதனால் வாழ்வை
பலதுயரம் நிறைந்ததொரு கூடம் என்றே
       பாழ்நெஞ்சில் நினைந்துவிட்டோம் தாழ்வே கொண்டோம்.

ஆற்றுக்குக் கரையிரண்டு வேண்டு மன்றோ?
       அதுபோல வாழ்வுக்கும் கரைகள் வேண்டும்;
ஏற்றமிகும் ஒருகரைதான் இன்பம் ஆகும்
       இணையான மறுகரைதான் துன்பம் ஆகும்;
காற்றுக்குள் இரண்டுண்டு; தென்றல் ஒன்று
       கடுகிவரும் வாடைஒன்று; வாடை கண்டு
காற்றைத்தான் வெறுப்பதுண்டோ? வாழ்வில் துன்பம்
       கலந்துவரும் நிலைகண்டு வெறுத்தல் நன்றோ?

வாடைஎனுங் காற்றுவரின் போர்வை கொண்டு
       வருந்தாமல் நடுங்காமல் தடுத்துக் காப்போம்;
தேடரிய வாழ்வுதனில் துன்பம் வந்து
       சேருங்கால் துவளாமல் ஊக்கங் கொண்டு
பாடுபட அத்துன்பம் விலகிப் போகும்;
       பாருய்ய வந்தவனாம் வள்ளு வன்சொல்
ஏடதனில் இவ்வுண்மை நன்கு தோன்றும்
       இடுக்கண்கள் வருங்காலை நகுதல் வேண்டும்.