பக்கம் எண் :

26கவியரசர் முடியரசன் படைப்புகள் - 6

இன்பத்தின் பின்பக்கம் துன்பம், அந்த
       இடருக்குப் பின்பக்கம் இன்பம், இந்த
எண்ணத்தை முன்வைத்து வாழ்ந்தால் வாழ்க்கை
       இனிக்கின்ற கனியாகும் அன்றோ? வாழ்வின்
பின்பக்கம் ஒன்றுண்டாம் என்னும் அந்தப்
       பேருண்மை தனையெண்ண வேண்டும்; மற்றைப்
பின்பக்கம் சாக்காடே ஆகும் என்ற
       பேருண்மை உணர்ந்துவிடின் அச்சம் சாகும்.

பிறக்குங்கால் தாலாட்டு; மண்ணில் பின்னர்
       இறக்குங்கால் ஒப்பாரி; இரண்டும் பாட்டு;
மறக்காதீர் வாழ்க்கையொரு கவிதை யாகும்;
       மலர்ந்துவருங் கவிதைக்குள் திளைத்து வாழ்வீர்!
வெறுக்காதீர் வாழ்க்கைதனை! சாக்கா டென்றால்
       வீரனுக்கோர் பூக்காடு; கோழைக் குத்தான்
பொறுக்காத நோக்காடு; வாழ்க்கைப் போரில்
       புறங்காட்டா வீரனைப்போல் வாழ்வீர் நின்றே.