30 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 6 |
10 அறத்தின் வழிகாட்டி வள்ளுவனை வழிகாட்டி என்று பாட வன்பாகக் கைகாட்டி விட்டார் நண்பர்; தெள்ளுதமிழ் நாவலனை உளத்திற் கொண்டு சிந்தனையாம் பேருலகம் நோக்கிச் சென்றேன்; துள்ளுநடை போடுகையில் வழியி ரண்டு தோன்றுவதைக் கண்டங்கே மலைத்து நின்றேன்; தெள்ளியநல் வழிஎதுவோ? என்று நெஞ்சம் தெளியாமல் இருவழியும் நோக்கி நின்றேன். வடக்குவழி தெற்குவழி என்றி ரண்டுள் வடவழியில் புகத்துணிந்தேன் வாடைக் காற்று நடுக்கியது மனம்வெறுத்துத் திரும்பி விட்டேன்; நல்வழியாம் தென்வழியில் நடந்து சென்றேன்; நடக்கையிலே மணத்தோடு தென்றல் வந்து நலந்தரலால் புலமெல்லாம் மகிழக் கண்டேன் கடக்களிறு போல்நடந்தேன்; அவ்வி டத்தே கலகலவென் றொருசிலர்தாம் சிரிக்கக் கேட்டேன். நடைநிறுத்தி அவர்தம்மை நோக்கி நின்றேன்; நன்கணிந்த திருநீறு குவிந்த கொண்டை தடையின்றி வளர்ந்திருக்குந் தாடி மீசை தளதளத்த மார்பகத்தே பட்டை நூல்கள் இடையிலொரு நீள்கச்சை இந்த வேடம் ஏற்றவரும், தலைமழித்துப் பட்டை நாமம் |