பக்கம் எண் :

36கவியரசர் முடியரசன் படைப்புகள் - 6

எத்திசையும் பேர்மணக்க ஏற்றமுடன் வீற்றிருந்தே
ஆண்ட தமிழ்வேந்தர் ஆட்சியையுங் காணுங்கால்
மீண்டும் பெருமிதமே மேலோங்கும்; அஃதன்றி
மூவேந்தர் ஆண்டு முறைசெய்த இந்நாட்டைப்
பாவேந்தர் பாடிவைத்த பாட்டெல்லாம் நாம்சுவைப்பின்
நாவேந்திப் பாடுதற்கு நாள்போதா; ஆயினுமே
தாழ்வேந்தும் இந்நாள் தமிழகத்தை நோக்குங்கால்
வாளேந்தி வாழ்ந்தோர் வறுமைக் கிலக்காகித்
தாளேந்தி இவ்வண்ணம் தாழ்வதுவோ என்று
கவலை மிகவாகிக் கண்கணீர் சிந்த
அவலச் சுவைநம்மை ஆட்டிப் படைத்துவிடும்;
காட்டிக் கொடுக்குங் கயமைக் குணமிந்த
நாட்டில் உலவிவரல் நமக்கெல்லாம் இளிவரலே;
வாயின் சுவைக்கும் வயிற்றின் சுவைதனக்கும்
நாயின் இழிந்து நலங்கெட்டு வாழ்பவரைக்
கொள்கைப் பிடிப்பின்றிக் கோணற் சிறுமதியால்
எள்ளுந் தொழிலால் இருப்போரைக் காணுங்கால்
தோன்றும் நகைச்சுவையே; தோழர்களே நம்மைஎலாம்
ஈன்றதிரு நாட்டுக்கும் இன்பத் தமிழ்மொழிக்கும்
கேடு விளைக்கின்ற கீழோரைக் காணுங்கால்
பாடுகின்ற பாடலிலும் பாயும் பெருவெகுளி;
நாட்டின் நலம்மறந்து நாளுந் தமைநினைந்து
தேட்டை யடித்துவருந் தீயோரும், பிள்ளைகளை
வீட்டிற் பெருக்கிவரும் வீணர்களும், கற்றுயர
நாட்டம் இலராகி நாகரிகம் பெற்றவர்போல்
ஊரெல்லாஞ் சுற்றி ஒழுக்கம் உணராமல்
பேரெல்லாங் கெட்டழியப் பிஞ்சிற் பழுத்தவரும்
எங்கும் பெருகும் இழிநிலையைக் காணுங்கால்