பக்கம் எண் :

42கவியரசர் முடியரசன் படைப்புகள் - 6

13
வள்ளுவர் கண்ட உடைமைகள்

மாடமொடு நீடுமதில் சூழ்ந்தி ருக்கும்
       மாமனைகள், விளைந்துவரு நன்செய் புன்செய்,
தேடரிய பெருஞ்செல்வம், மணியும் பொன்னும்
       தேர்ந்தெடுத்துச் செய்தஅணி கலன்க ளோடு
மாடணியும் *சாகாடு, தொலைவி னின்று
       வந்திறங்கும் விலையுயர்ந்த ஊர்தி யின்னும்
நாடதனில் எதையெதையோ உடைமை என்று
       நம்பியதைப் பெறுவதற்கே உழலு கின்றோம்.

இவற்றையெல்லாம் உடைமையென நம்பி **வெஃகி
       எவ்வகையாற் பெறுதுமெனச் சூழ்ந்து செய்யும்
தவற்றையெலாஞ் சொல்வதெனில் யாரால் ஒல்லும்?
       தந்திரங்கள் வஞ்சனைகள் பொய்ம்மை இன்னும்
எவற்றையெலாம் செய்தேனும் வளத்தில் வாழ
       ஏங்குகிறோம் பிறருயிரை வாங்கு கின்றோம்
**அவத்தைஎலாம் நாணாமற் செய்து நின்றே
       அலைகின்றோம் ‡மலைகின்றோம் இனத்தா ரோடு.

கொடுமைபல ¶செய்தவற்றைப் பெற்ற பின்பும்
       கொண்டபொருள் போதுமெனும் எண்ணம் நெஞ்சிற்
கடுகளவும் படுவதுண்டோ? இல்லை யில்லை;
       கரைகாணா ஆசையினால் இன்னும் யாரைப்


*சாகாடு - வண்டி, **வெஃகி - விரும்பி ***அவத்தை - துன்பம்
‡மலைகின்றோம் - சண்டையிடுகின்றோம்
¶செய்தவற்றை - செய்து + அவற்றை