பக்கம் எண் :

வள்ளுவர் கோட்டம்57

குறளுங் கேட்டது குழப்பந் தெளிந்தது;
‘அறநெறி நின்றே இல்வாழ் வாற்றின்
புறநெறி யதனுள் போய்ப்பெறும் பயன்என்?
அறனெனப் பட்டதே இல்லறம் அதனைப்
பிறன்பழிப்பின்றி பேணுக’ என்றனன்
தலைவன் அவன்சொல் தலைமேற் கொண்டேன்;
நலமிகு மனையாள் நற்றுணை யாக,
மனமகிழ் வுடனே வாழ்க்கைத் தோணி
இன்பக் கடலுள் இனிதே மிதந்தது;
முன்பின் அறியா மொய்ம்புடை வறுமை
வன்புடன் புயலென வந்து வீசிடப்
பற்றாக் குறையெனும் பாழ்அலை மேலெழச்
சுற்றிய கவலை சுறாவென எதிர்ந்திட
முற்றிய துயர்க்கடல் மூழ்கித் தவித்தேன்;
வழிதெரி யாதுளம் வாடிடும் எனக்கு
வழிசொலுந் தலைவன் வருவனோ என்று
தாங்காத் துயரந் தாங்கிக் களைத்தேன்;
நீங்காத் தலைவன் நேரினில் தோன்றி,
‘ஏங்கேல் தம்பி, இடுக்கண் வருங்கால்
ஆங்கே நகுக, அதுவே மருந்தாம்
அடுக்கிய இடுக்கண் அளப்பில வரினும்
மடுத்தவா யெல்லாம் பகடென முயன்றால்
இடுக்கண் என்செயும்? எழுச்சிகொள் தம்பி,
எதையுந் தாங்கும் இதயம் வேண்டும்’
எனவழி காட்டினன் என்னுடைத் தலைவன்;
கனிந்த மொழியன் காட்டிய வழியால்
துணிந்தேன் முயன்றேன் துயரே இல்லை!
இன்பம்! இன்பம்! இணையிலா இன்பம்!