58 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 6 |
உள்ளஞ் சோர்வுறின் ஓடிவந் தென்பால் வள்ளுவன் காட்டிய வழியெலாம் விளம்பின் ஒன்றா இரண்டா ஒரா யிரமாம்; ‘குன்றா வளத்துடன் கூர்மதி இருப்பினும் நன்றாம் பணிதல் நாடுக இதனை; ஒன்றுநன் றொருவர் உனக்குச் செய்ததை என்றும் நினைத்திரு ஈதுனை உயர்த்தும்; காக்கும் பொருள்பல காவா விடினும் நாக்கினைக் காக்க நாளும் தவறேல்; மறந்துங் கேடு மற்றவர் தமக்குப் புரிந்திட நினையேல் போற்றுக நன்மை;’ எனப்பல நெறிகள் இனிதே உணர்த்தி மனத்துட் பண்புகள் விளைத்தனன்; அவனே இனிய வாழ்க்கைக் கேற்றதோர் தலைவன்; எனநான் கொண்டுளேன்; இப்புவி வாழ்வோர் அனைவர் தமக்கும் அவனே தலைவன் அருளும் அறமும் கருதிய தலைவன்; தேர்தலில் நில்லா நேரிய தலைவன்; ஆர்நிகர் உள்ளார் அவற்கெனுந் தலைவன் போட்டியிங் கில்லாப் புகலருந் தலைவன் பாட்டால் பண்பை ஊட்டிய தலைவன் மக்கள் நலமே மதித்திடுந் தலைவன் மிக்குயர் அறிவால் மேம்படுந் தலைவன் வாழிய தலைவன் வாழிய நலமே வாழிய குறள்நூல் வாழிய இனிதே. 31.5.1969 |