60 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 6 |
தெள்ளுதமிழ்ப் பேருடையான் தேர்ந்த புலமுடையான் அன்றிங்கு வாழ்ந்ததனால் ஆருயிர்க்கு முப்பால்நூல் ஒன்றிங்குத் தந்துவந்தான்; உண்மையில் இன்றுவரின் முப்பாலைத்தொட்டு முடிக்காது விட்டிருப்பான்; எப்பாலோ சென்றவனும் ஏங்கிப் புலம்பிடுவான்; வஞ்சனையே வையத்தில் வாழும் நிலைகண்டு நெஞ்சு கொதித்து நினைந்து நினைந்தழுவான்; மக்கள் நிலைமாறி மாக்கள் நிலைக்கேகித் தொக்கிருக்கக் கண்டு துடிதுடித் தேவிழுவான்; சொல்லும் *உயர்திணையைச் சூழுலகிற் காணாது வல்லதோர் *அஃறிணையாய் வாழ்வாரைக் கண்டழுவான்; கற்றறிவு காட்டுவதில் *முற்றாக நில்லாது சொற்றதோர் *எச்சமெனச் சூழ்வாரைக் கண்டழுவான்; எச்சங்கள் நற்பெயரை ஏற்க முடியாமல் அச்சங்கொள் தீவினைக்கே ஆளாகக் காண்பான்; இலக்கணத்தார் *வேற்றுமை எட்டென்பர் இங்கோ சொலத்தொலையா வேற்றுமை சூழ்ந்திருக்கக் கண்டிடுவான்; பண்பு தொகைதொகையாய்ப் பாரில் பரவாமல் *பண்புத் தொகையான பாழ்நிலையைக் கண்டிடுவான்; உண்மைஅறம் நேர்மை உலகத்தில் தேடுங்கால் *அன்மொழியாய்ப் போனதுகண் டாற்றா தழுதிடுவான்; நாற்பா வகைஎல்லாம் நன்குணர்ந்த பாவலர்தம் நூற்பாக்கள் கண்டுவக்க நுண்ணறிவன் இன்றுவரின் வெண்பா எனும்பெயரால் விட்டுவைத்த நூலெடுத்து *வெண்பாட்டுக் கண்டுளத்தில் வேதனைகள் கொண்டிடுவான் நல்ல *அகவல்நூல் நாடி வருங்காலை அல்லல் மிகுந்தோர் அகவலன்றி வேறறியான்;
*உயர்திணை, அஃறிணை, முற்று, எச்சம், வேற்றுமை, பண்புத்தொகை, அன்மொழி, வெண்பாட்டு முதலிய இலக்கணச் சொற்கள் நயம்படக் கூறப்பட்டுள்ளன. |