62 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 6 |
என்றெல்லாஞ் சொல்லி *இனைந்து மனமுருகி நின்றன்னான் வெய்துயிர்த்து நீடு நினைந்தழுவான்; “கூறு படுத்திடவே கூறுஞ் சமயங்கள் நூறு வகையாம்! நுவல்வழியும் வெவ்வேறாம்! எல்லாருங் கொண்டொழுகற் கேற்ற நெறிமறந் தல்லா நெறிபுகுந்தே அல்லற் படுகின்றார்; ஒன்றே குலமாக ஒன்றே இறையாக நன்றே புகல்நெறியை நாடாமல் ஓடுகின்றார்; ஒற்றுமைதான் இங்கே உருப்படுமா? மக்களுக்குள் பற்றுள்ளந் தோன்றிப் பரவிடுமா? இம்மாந்தர் நெஞ்சகத்தே மாசகற்ற நேராமல் எத்துறையும் வஞ்சித்தே ஆகுலங்கள் வாய் விட்டொலிக்கின்றார்” என்று மனம்நைந் தெழுந்து நடந்தகன்று நின்று விழியால் நிலவுலகை நோக்கிடுவான்; வாழ்கின்ற மாளிகையோ வான முகட்டளவு ஏழ்நிலைய மாடத் தெழிலோ டுயர்ந்திருக்கும்; உள்ளுறையும் மாந்தர் உள்ளமோ கீழ்நோக்கிப் பள்ளம் படுகுழியில் பாய்ந்து விழுந்திருக்கும்; உண்டு களித்திருப்போர் ஓர்புறத்து மாளிகையில் பண்டை அரசரெனப் பஞ்சணையில் சாய்ந்திருப்பர்; நெஞ்சுலர்ந்து வாயுலர்ந்து நிற்கும் இடமிழந்து பஞ்சையர்கள் ஓர்புறத்தே பட்டினியில் வீழ்ந்திருப்பர்; மஞ்சு தவழ்ந்து வரும் மாடமனை ஓர்புறத்து விஞ்சும் எழில் தாங்கி வீறுபெற நின்றிலங்கும்; ஓடென்றுங் காணா தொழுகுஞ் சிறுகுடில்கள் வீடென்ற பேரால் விளங்கும் மறுபுறத்தே; மேடென்றும் பள்ளமென்றும் மேலென்றுங் கீழென்றும் நாடின்னுஞ் சொல்லி நடப்பதெலாங் கண்டிடுவான்; |