பக்கம் எண் :

வள்ளுவர் கோட்டம்63

கண்டால் வெகுண்டு கவியைக் கணையாகக்
கொண்டே உலகைக் கொளுத்தும் நிலைபெறுவான்;
எல்லாரு மிந்நாட்டு மன்னரெனச் சொன்னபினும்
பொல்லா நிலையைத்தான் பொய்யா மொழிகாண்பான்;
இந்நாட்டு மன்னர் இரந்துமுயிர் வாழ்வதுபோல்
எந்நாட்டுங் காணா இயல்பதனைக் காணுங்கால்
வெம்பித் துடிக்காமல் வேறென்ன செய்திடுவான்
அம்புவியைத் தந்தோன் அமைத்ததிது வென்றால்
படைத்தவன் இங்கே பரந்தொழிக என்றே
வெடுக்கென்று கூறாமல் வேறென்ன பேசிடுவான்;
இவ்வண்ணங் காண்பதனால் எள்ளி நகைத்தாலும்
செய்வண்ணந் தோன்றாமல் சிந்தித் தழுதாலும்
வெங்கொடுமை மாய்க்க வெகுண்டே எழுந்தாலும்
இங்குலகில் ஒன்றிரண்டு நன்மை இருப்பதனால்
வள்ளுவன் சொல்நெறியில் வாழ்வோர் இருப்பதனால்
உள்ளம் மகிழ்ந்திருப்பன் ஒப்பரிய அப்பெரியோன்;
உள்ளத்தாற் பொய்யா தொழுகி உலகத்தார்
உள்ளத்துள் எல்லாஞ்சேர்ந் துள்ளவனை நெஞ்சத்தில்
பொய்யா விளக்கேற்றிப் புன்மை இருளகற்றும்
வெய்யோன் எனநின்ற வித்தகனை வெய்யோர்
கறுத்தின்னா செய்தாலும் காழ்ப்புமிகக் கொண்டு
மறுத்தின்னா செய்யா மனத்தானை இவ்வுலகம்
ஏந்திப் புகழ்பரவ ஏத்தித் தொழுகின்ற
காந்திப் பெயரானைக் கண்டால் மகிழ்ந்திடுவான்;
கேட்டார்ப் பிணிக்குந் தகையவாய்க் கேளாரும்
வேட்ப மொழிந்துலகை வெல்லுஞ்சொல் லானை
அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தன்னை
இகழ்வார்ப் பொறுக்கும் இயல்புடைய சான்றோனை