பக்கம் எண் :

64கவியரசர் முடியரசன் படைப்புகள் - 6

அன்புநாண் ஒப்புரவு கண்ணோட்டங் கொண்டானை
இன்னாசெய் தார்க்கும் இனியசெய் வானை
மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தான்தன்
தகுதியான் வென்றுவரும் தண்ணளிசேர் நெஞ்சானை
இந்நாட்டை மீட்க எழுந்துவரும் நல்லவனைத்
தென்னாட்டுக் காந்திஎனச் செப்புநம் அண்ணாவைக்
கண்டால் மகிழ்வான் களிப்பால் குதிப்பான்
உண்டோ இவற்குவமை என்றுள்ளம் பூரிப்பான்;
பாருல கெங்கும் பகுத்தறி வோங்கிவர
யாருஞ் செயற்கே அரிய செயலாற்றிச்
சாதி சமயச் சழக்ககற்றிப் பேதைமையை
மோதித் தகர்த்தெறிய முற்பட்ட நம்பெரியார்
தொண்ணூறு தாண்டிவிட்ட தொண்டுகிழ மானாலும்
தொண்டு புரிவதனால் தூயோன் மனமகிழ்வான்;
புத்துலகம் பூப்பதற்குப் பொங்கி எழுமறவர்
வித்திட்டு நீர்பாய்ச்சி வேளை தவறாமல்
பாடுபட்டுக் காக்கும் பயிர்நிலத்தைக் காணுங்கால்
நாடுகெட்டுப் போகாமல் நன்மையுறும் என்றுணர்ந்து
வள்ளுவத்துப் பேராசான் வையப் பெரும்புலவன்
உள்ளத்துக் கொள்வான் உவப்பு.

திரவியம் தாயுமானவர் இந்துக் கல்லூரி
திருநெல்வேலி. 1.3.70