பக்கம் எண் :

வீரகாவியம்263

இயல் - 2

முழுவலியன் மாவேழன் என்னும் வீரன்
மூவகத்தின் படைத்தலைமை பூண்டு நின்றான்.

அக்காலை மூவகத்தின் படைந டாத்தும்
      ஆணழகன் பலகளிற்றின் வலிமை மிக்கான்;
எக்காலும் போர்க்களமே இருப்பாக் கொண்டான்
      ஏறனையான் மாவேழன் எனும்பேர் பூண்டான்;
மிக்காரும் ஒப்பாரும் காணாச் செம்மல்
      மேவலரை நடுக்குறுத்தும் இமையா நோக்கன்;
புக்காரும் வெலற்கரியன்; அவன்பேர் கேட்டால்
      பூவேந்தர் நடுநடுங்கிப் பதுங்கி நிற்பர்.7

மூவகமே அவன்வணங்கும் அன்னை யாகும்;
      முதல்மகனாம் மன்னவனே தந்தை யாவன்;
சேவகரே மனம்விழைந்த சுற்ற மாவர்;
      சிரிப்பொளிரும் இடைமருவும் செவ்வாய் வாளின்
நாவகமே காதலியின் இதழ்க ளாகும்;
      நள்ளார்தம் கூர்வாளால் முகத்தும் மார்பும்
பாவியமேல் விழுப்புண்ணே முத்த மாகும்;
      பகைவருடல் நிறைகளமே மெத்தை யாகும்.8

கூர்வேலும் வாய்வாளும் பகையைத் தாக்கிக்
      குவிக்கின்ற உடலங்கள் சிந்தும் செந்நீர்
பார்மேவி ஒன்றாகி ஓடும் ஆற்றின்
      பரப்பதுவே அவன்குதித்து நீந்தும் வெள்ளம்;
ஏர்போலும் ஒருகருவி இடித்துத் தாக்கி
      எழுகின்ற கூக்குரலே யாழின் பாட்டு;
சேர்காலை இருவாளும் எழுப்பும் ஓசை
      செவிக்கினிய முழவோசை அவனுக் காகும்.9


மேவலர் - பகைவர்.புக்குஆரும் - யாரும் புகுந்து. ஒளிரும் - விளங்குகின்ற நாஅகம் - விளிம்பு.
நள்ளார் - பகைவர். பாவிய - படர்ந்துள்ள.