இயல் - 10 வயத்தரசன் விருந்தயரப் பணிந்து வேண்ட மாவேழன் சினந்தணிந்து மனமிசைந்தான். பொறுமையுடன் இவைமொழிவான், ‘வீரமொன்றே பூணாகக் கொண்டொளிர்வோய்! தவிர்க சீற்றம்; தெறுபுரவி யாண்டுளதே எனினும் நாட்டில் தேடியதைக் கொணர்விப்பேன்; வருந்தல் வேண்டா; உறுவலிசேர் நின்பரிமா பிரிந்த செய்தி உரைத்ததன்பின் தானறிவேன்; பாய்மா தேடத் திறமுடையார் நாற்புறமும் செலப்ப ணிப்பேன்; சென்றவர்தாம் கைக்கொண்டே மீள்வர் மேலோய்!31 கொற்றமுறப் பொருவலியோய்! தேடிச் சென்றோர் கொய்யுளைய புரவியொடு மீளுங் காறும் பற்றுடனென் அரண்மனைக்கே எழுந்து போந்து பாங்குபெற விருந்தினனாய்ச் சின்னாள் வைகிச் சுற்றமெனக் கருதிஎனைப் பெருமை செய்க! தோழமையை வளர்த்திடுக! வருக’ என்று கொற்றவனவ் வீரனிடம் கனிந்து நோக்கிக் குளிர்மொழிகள் பலகூறிப் பணிந்து நின்றான்.32 பற்றலர்தாம் தன்னெதிரில் பணிந்து நிற்பின் பகைவிடுத்து நகைத்துரிமை பூணல் வீரம் உற்றவர்தம் கடனாகும்; அதனால் வேழன் உளங்கனிந்த வயத்தரசன் வேண்டுகோளால் செற்றமது தவிர்ந்தவனாய் மூரல் பூத்துச் செழுமனையில் விருந்தயர இசைவு தந்தான்; கொற்றவன்றன் உள்ளமெலாம் மகிழ்வு பொங்கக் கோவிலுக்கவ் வேலானை அழைத்துச் சென்றான்.33
தெறு - பகைவரை அழிக்கின்ற, கொற்றம் - வெற்றி, கொய்உனை - கொய்யப்பட்டபிடரிமயிர். பற்றலர்- பகைவர், மூரல்பூத்து - புன்னகைசெய்து |