இயல் - 19 வெறுப்பெதற்குத் திருமணத்தில் என்றான் வேழன் வீரனுக்குக் காதலியாம் என்றாள் தோழி. ‘திருமணமே கூடாதென் றேன்வெ றுத்தாள்? சீரிளமைப் பேரெழிலைப் பாழ்ப டுத்தத் திருமகள்தான் ஏன் நினைத்தாள்? தேனும் பாலும் தெருமண்ணில் சிந்திவிட நினைவா ருண்டோ? நறுமணமார் ஒருமலரைக் கசக்கி வீசும் நல்லவரைக் கண்டதிலை; பேதை என்னும் ஒருபெயரை நிலைநாட்டப் பேதுற் றாள்கொல்? உலகியலுக் கொவ்வாத செயல்மேற் கொண்டாள்’67 திகைத்தவனிவ் வணமுரைக்கத் ‘தேனும் பாலும் தெய்வவழி பாட்டுக்கே வைத்தாள் ஐய! முகைத்துவிரி மலர்தன்னைக் கசக்க வில்லை முனம்விழைந்த பூசைக்கே பேணிக் காத்தாள்; நகைத்தவளைப் பேதைஎன நவிலல் நன்றோ? நலமிகுந்த பெண்மைக்கோர் சான்றாய் நின்றே அகப்பொருளின் உயர்பண்பைப் போற்றிக் காக்க ஐம்புலனுக் காளாகா திருந்தாள்’ என்றாள். 68 ‘உன்மொழியின் உட்பொருளை உணரும் ஆற்றல் உடையனலேன், தெள்ளிதின்நீ விளங்கக் கூறின் என்மனமும் தெளிந்திடரின் நீங்கும் என்றான்; ஏங்குமவன் உள்ளத்தைப் புரிந்த தோழி, ‘மின்னொளிரும் நெடுவேலோய்! எங்கள் செல்வி மிக்காரும் ஒப்பாரும் இல்லா னுக்குத் தன்மனத்தைத் தந்தமையால் அவனை யன்றித் தார்சூட மணம்புரிய இசைந்தா ளல்லள்.69
முகைத்து - மொட்டாகி |