பக்கம் எண் :

294கவியரசர் முடியரசன் படைப்புகள் - 7

வன்றிறலன் இன்றுளனோ? என்றன் வாளின்
      வாய்மழுங்கிப் பொன்றியதோ? அவன்பேர் கூறாய்!
நின்றன்முனம் கொன்றுடலைக் கிழிப்பன் கூறாய்!
      நிலைகுலையா வீரத்தின் ஆணை’ என்றான்.74

‘மூவகத்துப் பெருநாட்டின் வீரன் என்றாய்
      மொய்குழலி! காதலைநான் இழந்து விட்டுப்
போவதற்கு மனமிசைவேன்; என்றன் வீரம்
      புல்நுனியின் அளவேனும் குறைவ தென்றால்
சாவதற்கும் நான்தயங்கேன்; என்னின் மிக்க
      தறுகணன்யார்? யாதவன்பேர்? நொடியிற் கூறு;
பூவகத்து வாழ்வானை விண்ண கத்துப்
      போய்ப்புகுதச் செய்வித்து மீள்வேன்’ என்றான்.75

‘அப்பெயரை நின்முன்பு கூறல் நன்றோ?
      அஞ்சுகின்றேன்; பெண்மைக்கு முறையு மன்று;
தப்பெனவே உலகுரைக்கும்; மேலும் நீதான்
      தரியலர்க்குக் கூற்றாவாய் உண்மை; ஆனால்
ஒப்பரிய இளவரசி உளங்க வர்ந்த
      ஒருவனை நீ என்செய்ய இயலும்?’ என்றாள்;
‘செப்புகஅப் பெயரென்றால் ஏதே தோநீ
      செப்புகின்றாய்’ எனஇடிபோல் முழங்கி நின்றான்.76

செப்புகின்றேன் உண்மைநிலை சினவேல் ஐய!
      சீயங்கள் பலகுழுமி எதிர்நின் றாலும்
உட்புகுந்தே விளையாடி அவற்றை யெல்லாம்
      ஒவ்வொன்றா எடுத்தெறியும் ஆற்றல் மிக்கான்;
இப்புவியின் இளவரசி காதல் நெஞ்சில்
      இடங்கொண்ட பேறுடையான் யாவன் என்றே
துப்பறியத் துடிக்கின்றாய்! நின்னை யன்றித்
      தொல்லுலகில் யாவருளார் வீரன் என்றே’.77


பொன்றியதோ - அழிந்ததோ, தறுகணன் - வீரன்.
சினவேல் - கோபிக்காதே. சீயம் - சிங்கம்.