பக்கம் எண் :

வீரகாவியம்305

இயல் - 26

மாதரசி வேல்விழியை ஆங்குக் கண்டு
மாவேழன் சிலையென்று மயங்கி நின்றான்.

பாங்கியுரை மலர்ப்பொய்கைப் பாங்கர் வேழன்
      பறந்துவந்தான்; அன்னவனைக் காண்பான் வேண்டி
ஏங்கிமுனம் ஆங்குவந்த நங்கை நோக்கி
      எழுந்தொருபால் நிலம்நோக்கி நாணி நின்றாள்;
தேங்கெழிலின் அவ்வுருவைக் கண்ட வீரன்,
      ‘திகைத்தன்று சித்திரத்தைக் கண்டேன்; இன்று
பாங்குடைய சிலையுருவைக் காணு கின்றேன்;
      பாவையைத்தான் காணுகிலேன் இன்னும்’ என்றான்99

குழலேந்தும் மலர்த்தொகையும், பிறையை வெல்லும்
      குறுநுதலும், கரியசிறு புருவ வில்லும்,
அழகேந்தும் விழிமலரும், செவ்வா யென்னும்
      அல்லியுடன் முகமலரும் வியந்து நோக்கி,
‘விழவேந்தி ஊர்வலமாத் தேரில் செல்லும்
      விந்தைமிகு பொற்சிலைபோல் இதனைச் செய்தே
நிழலேந்தும் பைந்தருவின் அடியில் சிற்பி
      நிற்கவைத்த காரணமென்? தவறே செய்தான்!100

கைம்மலராற் பற்றியுள தாம ரைப்பூக்
      காண்பவரை மயக்குறுத்தும் வண்ணம் சிற்பி
செய்ம்முறையை என்னென்பேன்! சிலையின் வாயில்
      சிவப்பூட்டிச் செய்தஇதழ் அடஓ விந்தை!
பொய்ம்மையிலை உயிருடைய பெண்ணே என்று
      புகன்றிடுவர் நோக்குநர்தாம்; தொட்டு ணர்ந்தே
மெய்ம்மையினை உணர்ந்திடுவர்; இதனைச் செய்தான்
      மேன்மையினை எவ்வண்ணம் புகழ்ந்துரைப்பேன்?101


குழல் - கூந்தல். நுதல் - நெற்றி. தரு -மரம்.