பக்கம் எண் :

308கவியரசர் முடியரசன் படைப்புகள் - 7

என்றுரைத்துப் பின்தொடர்வோன் அவள்செங் கையில்
      இலங்குமலர்த் தாமரையை நோக்கு வான்போல்
‘ஒன்றிநிற்கும் அவ்விரண்டு மொட்டும் வேண்டி
      உனையிரப்பன் மகிழ்ந்தளிக்க வல்லாய் கொல்லோ’
என்றவற்கு மொட்டிரண்டும் ஈய வந்தாள்;
      ‘ஈதன்றே என்னுளத்து வேட்கை! என்னுள்
நின்றிருக்கும் மலரேனும் தருவாய்’ என்றான்;
      நேரிழையாள் மலரொன்று கொடுக்க வந்தாள்.107

‘சேயிழையுன் கைம்மலரை விழைந்தே னல்லேன்
      செங்கயல்கள் பிறழ்மலரே வேண்டு கின்றேன்;
ஈயிதனை இல்லைஎனின் செம்மை தோயும்
      இதழிரண்டு தந்தாலும் போதும்’என்றான்;
வேயிணையும் தோளியிதழ் கொய்தா ளாக
      ‘விடுவிடுஅவ் விதழ்தன்னைக் கொய்ய வேண்டா
சேயிதழில் வழிதேனே வேண்டு’ மென்றான்;
      சிற்றிடையாள் மொழிக்குறிப்பைப் புரிந்து கொண்டாள். 108

‘பித்தரெனக் கலங்கிமனம் மாறி மாறிப்
      பேசுவதேன்? நகைமொழியோ? குறும்புச் சொல்லோ?
நத்துவதை உரைக்காமல் தடுமாற் றத்தால்
      நடுங்குவதேன்? பேதையர்பால் வீரர் காட்டும்
வித்தையிதோ வேண்டுவதை உறுதி செய்து
      விளம்புதியேல் தடையில்லை தருதற்’ கென்றாள்;
புத்தமுத மொழியிதனைச் செவியிற் கேட்டுப்
      பூரித்தான் அம்மொழியால் மயங்கி விட்டான்.109

‘பித்தத்தின் வேகந்தான் பேசு கின்றேன்;
      பேதையுன தெழிலுருவைக் கண்ட பின்பே
சித்தத்தின் நிலைகலங்கிச் செயல்க லங்கித்
      தெரிவையுனை நினைந்திரங்கி மயங்கி நின்றேன்;
முத்தமிழின் சுவையனைத்தும் நின்வாய்ச் சொல்லில்
      முகிழ்த்துவரக் காணுவதால் தெளிவுங் கொண்டேன்;
நத்துவதிப் பூங்கொடியே வேறொன் றில்லை
      நல்குதியேல் வானுலகும் வேண்டேன்’ என்றான்.110


வேய் - மூங்கில். சேயிதழ் - சிவந்த இதழ் 107, 108 - இருபாடல்களும் காதற் குறிப்பை நயம்பட உரைக்கின்றன. நத்துவது - விரும்புவது