பக்கம் எண் :

வீரகாவியம்313

இயல் - 29

பழகிய காதலர் படுதுயர் நீங்கிடப்
பொழுது புலர்ந்தது புள்ளினம் ஆர்த்தன.

துயிலுக்கும் காதலுக்கும் தொடர்பொன் றுண்டோ?
      துணைவனைத்தான் பெறும்வழியை உன்னி யுன்னி
மயலுக்குள் விழுந்துழல்வோள் உறக்க மின்றி
      மலர்ப்பாயல் துவண்டுவிழப் புரண்டி ருந்தாள்;
மயிலுக்கு மணமாலை சூட்டு தற்கு
      மன்னவன்றன் விடைகாணத் தவிக்கும் வீரன்
வெயிலுக்கு மன்னவன்றன் வரவு நோக்கி
      விழித்திமையான் காத்திருந்தான் விடியு மட்டும்.119

இருளுக்குள் துயில்மடியில் அயர்ந்தி ருக்கும்
      இருநிலத்தின் சோர்வகற்ற எழுந்த வெய்யோன்
கருநிறத்துக் கடலகத்துக் கதிர்க்கை நீட்டிக்
      கண்கவரும் எழிலோடு கீழை வானில்
குருநிறத்துச் செவ்வொளியாற் கோலஞ் செய்தான்;
      குரல்வகைய புள்ளினங்கள் இயம்போ லார்த்துச்
சிறகடித்துப் பறந்தனவான்; மலர்க ளெல்லாம்
      சிந்துபனி யாற்குளிர்ந்து பொலிந்த யாண்டும்.120


உன்னி - நினைத்து. குரு - அழகிய நிறம். இயம் - வாத்தியம், பொலிந்த - பொலிந்தன.