பக்கம் எண் :

316கவியரசர் முடியரசன் படைப்புகள் - 7

இயல் - 31

வேந்தன்பால் தூதுரைக்கச் சென்ற தோழி
வேல்விழிக்கு மணமுடிக்க வேண்டி நின்றாள்.

மாதுக்குத் தந்தைவயத் தரசன் பாங்கர்
      மாவேழன் வேல்விழியின் மணமு டிக்கத்
தூதுக்கு நேர்ந்துசெலும் தோழி, மன்னன்
      துய்யமணி மண்டபத்தில் தனித்தி ருக்கும்
போதுக்கு வந்தெதிரே தொழுது நின்றாள்;
      புன்னகையால் வாழ்த்தியவன் அவளை நோக்கி,
‘யாதுக்கு வந்தனைநீ? நின்னு ளத்தில்
      என்விழைந்தாய்? விளம்புதியேற் பெற்றாய்’ என்றான்.125

‘உரைபிறழாச் செங்கோன்மை உடையோய்! என்றன்
      உள்ளத்தை உரையாமுன் பெற்றாய் என்றாய்;
கரையறியாப் பேருவகை நெஞ்சிற் பாயக்
      காண்கின்றேன் என்கருத்து முற்றிற் றென்றே;
விரைபிரியா மலர்பூத்துக் குலுங்கும் முல்லை
      வியன்கொடிதான் படரஒரு கொழுகொம் பின்றித்
தரைதனிலே கிடந்திடுமேல் வளர்ச்சி யுண்டோ?
      தவித்திருக்கக் காண்பதுதான் நமக்கும் நன்றோ?126

இளமைஒரு நிலையுடைய பருவ மன்றே;
      இருநிலத்தில் அப்பருவம் உயர்ந்த தொன்றாம்;
வளமையினை நுகர்ந்தின்பம் துய்த்த லின்றி
      வறிதொழிய விட்டுவிடல் இயல்பும் அன்று;
களமர்வயல் பருவத்தே பயிர்செய் யாரேல்
      கண்காணப் பயனொன்றும் தருவ தில்லை;
களகளவென் றாழியினுள் மழைபொ ழிந்தால்,
      கானகத்து நிலவெறிந்தால் எவர்க்கு நன்மை?’127


விரை - மணம் களமர் - உழவர்