பக்கம் எண் :

324கவியரசர் முடியரசன் படைப்புகள் - 7

இயல் - 35

துணையாவோன் வேழனெனத் தோழி சொல்ல
மணநாளை முரசறைய மன்னன் சொன்னான்.

‘மணமகனாய் மருமகனாய் மாலை சூட
      மாவேழன் வருமென்றால் மறுப்பா ருண்டோ?
நிணமருவு நெடுவேலான் பெயரைச் சொன்னால்
      நீணிலத்துக் குறைசொல்ல எவரே உள்ளார்?
மணமலர்சூழ் நெடுங்குழலாள் இவனை எய்த
      மாதவமே செய்திருத்தல் வேண்டும்; வேந்தர்
கணமுழுதும் இவனிழலில் வாழும் போது
      களிறனையான் தகுதிக்கோர் குறைதான் ஏது? 146

என்மகளோ பிழைசெய்வாள்? இல்லை! இல்லை!
      என்குலத்துப் பெருமையினை உயர்த்தி விட்டாள்!
பொன்மலரில் நறுமணமே தோன்றிற் றென்னப்
      பூவையிவள் மனத்தெழுந்த ஆர்வ மெல்லாம்
தன்னளவிற் கைக்கிளையாய் விடுமோ என்று
      தயங்குகிறேன்; மாவேழன் இசையா னாகின்
மின்னனையாள் வேல்விழியின் நெஞ்சில் துன்பம்
      மிடைந்துவிடும் வாழ்வுமொரு கான லாகும்.’147

என்றிரங்கும் மன்னனுக்குத் தோழி சொல்வாள்,
      ‘இளவரசி பெறுங்காதல் இரண்டு நெஞ்சும்
ஒன்றுபடும் ஐந்திணையாய் விளங்கிற் றைய!
      ஒருமகளாம் வேல்விழியை மணக்கும் நாள்தான்
என்றுவரும் என்றேங்கு கின்றான் வேழன்;
      எள்ளளவுங் கவலற்க; இசைவும் தந்தான்;
மன்றல்கொள இவ்வணங்கை மறுப்பா ருண்டோ?
      மாதவங்கள் செய்தவற்கே வாய்க்கும்’ என்றாள்.148


நிணம் - கொழுப்பு ஐந்திணை - பொருந்திய அன்பு, மன்றல் - மணம்