பக்கம் எண் :

வீரகாவியம்329

இயல் - 39

முரசம் ஆர்த்தது முழவொலி கேட்டது
அரசன் மகளை அடைந்தனன் வேழன்.

மணமகளாம் வேல்விழியை அணுகி நின்று
      மன்னவனவ் வுறுதிமொழி கூறக் கேட்டுக்
குணமகளாம் அன்னவளும் இசைந்தா ளாகக்
      கொற்றவனும் மகிழ்ந்தெழுந்து சான்றோர்ச் சார்ந்து
மணவறையை அமைப்பதற்கு நாள்கு றித்தான்;
      மாநகரம் முழுமைக்கும் முரச றைந்து
தணவரிய மகிழ்வூட்டும் செய்தி சொல்லத்
      தனைச்சூழும் அமைச்சர்க்கும் ஆணை யிட்டான்.159

மாந்தரெலாம் மணமுரசங் கேட்டுத் தங்கள்
      மக்கள்திரு மணம்போல மகிழ்வு கொண்டார்;
வேந்தனுறை அரண்மனையும் மாடஞ் சேரும்
      வீதிகளும் தாமுறையும் இல்லம் யாவும்
ஏந்துமெழில் கொண்டிலங்கத் தோர ணங்கள்
      எடுத்தார்பூம் பந்தர்பல படைத்தார்; வண்ணச்
சாந்துவகை மதிற்பூசி நகர மெல்லாம்
      சாற்றரிய ஒப்பனையாற் கோலஞ் செய்தார்,160

தெருவெல்லாம் புதுமணலைப் பரப்பிக் கோலஞ்
      செய்திறத்தாற் புதுநகரம் படைத்து விட்டார்;
செருவெல்லாம் வென்றவனைக் கணவ னாகச்
      சேயிழையாள் மணமாலை சூட்டும் நன்னாள்
வருவதனாற் சிறைக்கதவம் திறக்க என்று
      வாள்வேந்தன் ஆணையிட்டான்; வாரி வாரித்
தருபொருளால் கற்றோரும் மற்றோர் யாரும்
      தனிமகிழ்ச்சி கொளச்செய்தான் தானுங் கொண்டான்.161