பக்கம் எண் :

332கவியரசர் முடியரசன் படைப்புகள் - 7

புகுந்தவர்தாம் புதுமைமிகும் உலகிற் சென்று
      புக்கவர்போல் அமர்ந்திருந்தார்; இருவர் நெஞ்சும்
தகுந்தகுமென் றாசையினால் படப டத்துத்
      தாளமிட உணர்ச்சிகொண்டார்; வடுவின் காயை
வகுந்ததெனும் விழியாலே அவன்ந லத்தை
      வாரியுண்டாள்; அவனுந்தன் விழிம லர்த்தி
நகுங்கமல முகத்தாளின் அழகை எல்லாம்
      நனியுண்டு மயங்கிமனங் களித்தி ருந்தான்.167

கையொன்றால் சேயிழையின் மென்தோள் பற்றிக்
      கன்னத்தை மற்றொன்றால் தொட்டான்; அந்தக்
கையொன்றா முன்னமவள் நாணங் கொண்டு
      காளையவன் தடந்தோளில் முகம்பு தைத்தாள்;
மெய்யொன்றும் பொழுதத்தில் இருவர் தாமும்
      மேனாளிற் கண்டறியா இன்பங் கண்டார்;
பொய்யென்றார் இவ்வாழ்வை அறியா மாந்தர்;
      புதுமையிது புதுமையிது என்று வந்தார்.168

காணாத இன்பத்தான் அவள்பாற் கொய்யாக்
      கனிகொய்தான்; முகஞ்சிவந்து பெண்மை நாணம்
பூணாகக் கொண்டவளும் கொழுநன் றன்னைப்
      பூங்கொடிபோல் தன்னுடலால் தழுவிக் கொண்டாள்;
‘பாணாக வண்டார்க்கும் பொய்கைப் பக்கம்
      பார்த்தென்பாற் பூங்கொடியை வேண்டி நின்றீர்!
நாணாளும் நுமைப்பற்றிப் படர்ந்து வாழும்
      நல்லகொடி யாகிவிட்டேன் கொள்க’ என்றாள்.169

பாலறியார் பழமறியார் ஆனால் அந்தப்
      பாற்சுவையும் பழச்சுவையும் நன்கு ணர்ந்தார்;
நூலறியார் கவிநுகரப் புகுதல் போல
      நுழையினும்பின் சொலற்கரிய இன்பங் கண்டார்;
வேலறிவான் வாளறிவான் எனினும் இன்று
      வேலறியாக் களங்கண்டான்; வெற்றி கண்டான்;
மாலவள்தன் விழிவேலால் தோற்புங் கண்டான்;
      வளர்நிலவுப் பயன்முழுதும் வாரி யுண்டான்.170


வடு - மாவடு, வகுந்தது - பிளந்தது. பாண் - பாடல், நாணாளும் - நாளெல்லாம் மாலவள் - இன்பமயக்க முடையவள்.