336 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 7 |
இயல் - 42 மயங்கினள் ஒருநாள் மாது வாடினன் வேழன்அப் போது. மாடத்து நிலவரங்கில் ஒருநாள், காதல் மணிப்புறவாய் அவ்விருவர் மகிழும் போது கூடத்துச் சென்றவள்வாய் குமட்டி நின்றாள்; கொடுவேலான் பதைத்தோடித் தோள்கள் பற்றிப் பீடத்தின் பஞ்சணையின் சேக்கை சேர்த்தான்; பேதையதன் மிசைமயங்கிக் கொடிபோற் சாய்ந்தாள்; வாடத்தன் காதலிக்கு வந்த தென்கொல்? வாய்குமட்டி நின்றதென்கொல்? எனத்துடித்தான்.178 மெல்லியகால் சுரந்துசிறி ததைத்தி ருக்க மேனியெலாம் பசந்ததுபோல் தளர்ந்தி ருக்க, வல்லியவள் முகஞ்சிறிது செம்மை மாறி வாட்டமுடன் விளர்த்திருக்கக் கண்டான்; போரிற் கொல்லியலின் திறங்கண்டும் இளகா நெஞ்சன் கோதையிவள் நிலைகண்டே இளகி விட்டான்; வல்லினமும் மெல்லினத்தைக் கூடுங் காலை வலிகுறைந்து மென்மைபெறல் உண்மை யன்றோ!179 குளிர்புனலை மலர்முகத்தில் தெளித்தான்; சற்றே குறைவுபட மயக்கொழிந்து தெளிந்தாள்; ‘நிள்றன் தளர்நிலையைக் கண்டுள்ளம் நடுங்கி விட்டேன் தளிர்மேனிக் கிந்தநிலை வந்த தென்கோல்? விளரியதுன் முகமென்கொல்?’ எனப்ப தைத்து வினவியவற் ‘கொன்றுமிலை’ என்று சொல்லி, முளரிமுகம் ஒருசிறிது கவிழ்த்து, நாணி, முறுவலித்து, வேல்விழியாள் அகன்றாள் ஆங்கே.180
முளரி - தாமரை. |