பக்கம் எண் :

340கவியரசர் முடியரசன் படைப்புகள் - 7

இயல் - 44

மணிவயிற்றில் வளர்மகவு ஆணே என்று
மாவேழன் கற்பனைத்தேர் ஊர்ந்து சென்றான்.

பிறந்தவுடன் அவனையிரு கையால் வாரிப்
      பெட்புடன் நான் வழங்கிடுவேன் முத்த மாரி;
திறந்தஎன தகல்மார்போ டணைத்துச் சென்று
      சீரியஎன் போர்க்களத்திற் கிடத்தி, மண்ணிற்
பிறந்தவனே! இம்மண்ணே உனக்கு வாழ்வு;
      பெருவீரங் காட்டியிதைக் காத்தல் வேண்டும்;
இறந்தாலும் களத்தேதான் இறத்தல் வேண்டும்;
      எனவாழ்த்தி வீரத்தை ஊட்டிக் காப்பேன்.189

மரத்தாற்செய் சிறுதேரும் குதிரை யானை
      வகைகளுடன் விளையாடத் தருவேன்; மேலும்
உரத்தால்வெம் புலியோடும் சிங்கத் தோடும்
      உடன்றுபொரச் சிறுவேலும் வாளும் ஈவேன்;
மறத்தோள்கள் திரண்டுருளும் பருவம் வந்தால்
      மற்போரும் விற்போரும் வாள்சு ழற்றும்
மறப்போரும் திறத்தோடு பயிற்று விப்பேன்;
      மாமல்லர் போர்க்களமே பள்ளி யாகும்.190

போர்க்களத்தில் தேரூர யானை ஏறப்
      புரவிமிசைப் பாய்ந்தேறப் பயிற்று வித்துப்
பார்த்தலத்தில் இக்கலையில் இவனைப் போலப்
      பார்த்ததிலை எனப்பகர வளரக் காண்பேன்;
ஆர்க்கின்ற அரியேறு பலவந் தாலும்
      அஞ்சாது பொருதழிக்கும் ஆற்றல் கொள்வான்;
கார்க்களிற்றின் இடைப்புகுந்து துதிக்கை பற்றிக்
      கரகரவென் றவன்கழற்றும் வலியன் ஆவான்.191


பெட்பு - விரும்பு. பள்ளி - பள்ளிக்கூடம். கார்க்களிறு - மேகம்போன்ற யானை