பக்கம் எண் :

வீரகாவியம்341

பண்டிளமைப் பருவத்தே எனது நாட்டில்
      பாய்மதமா வெறிகொள்ள மக்க ளஞ்சக்
கண்டுடன்கைத் தண்டொடுசென் றதனைத் தாக்கிக்
      கலங்கிஅது நிலந்தனிலே வீழ்ந்து சாகக்
கண்டவன்நான்; மைந்துடைய எனக்கு மைந்தன்
      களங்களிலே எனைவிஞ்சும் வலிய னாகித்
தண்டுபல துண்டுபடப் பொருதுங் காட்சி
      தணவாமல் கண்டுகண்டு மகிழ வேண்டும்.192

பெற்றெடுத்துப் புறங்காத்துப் பேணி, உள்ளப்
      பெட்புடனே வளர்ப்பதுநின் கடனே யாகும்;
செற்றமொடு பொருகளத்து வீரர் தம்முட்
      சீர்மைமிகு தலைவீரஞ் சான்றோன் என்ன
முற்றுபுகழ் பெற்றிடவே பயிற்று விக்கும்
      முழுப்பொறுப்பும் எனக்கிருக்கும் கடனே யாகும்;
கற்றபடி உற்றமர்கள் பலமு ருக்கிக்
      களிறெறிதல் காளைக்குக் கடனே யாகும்.193

வாள்பற்றிச் சுழன்றுசுழன் றவன்போர் செய்ய
      வட்டமிடும் பொழுதத்தில் ஆர்ப்ப ரிப்பேன்;
தோள்தட்டிக் கெக்கலிப்பேன்’ என்றே ஆர்த்தான்;
      துய்யமணி மண்டபமே முழங்கிற் றம்மா!
வேள்விட்ட பெருமுழக்கால் அஞ்சிப் ‘பேறு
      விளையுமுனம் இம்முழக்கா’ என்றாள் தோகை;
‘வாள்சுற்றும் போர்க்களத்தில் சீறும் போதும்
      மகிழ்பொழுதும் ஆர்ப்பரித்தல் என்வ ழக்கம்;194

அஞ்சல்விடு வஞ்சியொரு வீர னுக்கே
      அன்னையென ஆகியநீ நடுங்கல் நன்றோ?
கொஞ்சுமொழி மைந்தனுக்கு வீரப் பாலே
      கொடுத்துமற மூட்டுவதுன் கடனே’ என்றான்;
பஞ்சினுமெல் லடியுடையாள் அவன்சொற் கேட்டுப்
      ‘பாவைஎன்றன் மணிவயிற்றில் வளரும் செல்வம்
அஞ்சுகம்போல் பெண்ணாகப் பிறக்க வேண்டும்;
      அகலாமல் என்வயமே இருக்க வேண்டும்’.195


தண்டு - போர்க்கருவி. சேனை. தணவாமல் - நீங்காமல். முருக்கி - அழித்து, அஞ்சுகம் - கிளி