பக்கம் எண் :

வீரகாவியம்343

இயல் - 45

நாவலத்தான் படையெடுத்த செய்தி கேட்டு
மூவகத்து மாவேழன் கொதித்தெ ழுந்தாள்.

நாவலத்துப் பெருங்கனகன் பகைமை பூண்டு
      நட்புரிமை விட்டொழித்துச் செருக்குக் கொண்டு
மூவகத்துட் பெரும்படையை ஏவி விட்டான்;
      முனைத்தெழுந்து படையெடுத்து மதலைக் கோவும்
காவலுக்குப் புறப்பட்டான் என்ற செய்தி
      களிறடக்கும் மாவேழன் செவியிற் கேட்டான்;
போவதற்குக் கொதித்தெழுந்தான் முகஞ்சி வந்தான்
      பூரித்த தோள்தட்டி ஆர்ப்ப ரித்தான்.197

ஆர்ப்பரித்த ஒலிகேட்டு நங்கை வந்தாள்;
      ‘ஆயிழையே! நானில்லாப் பொழுத றிந்து
போர்ப்படையை நாவலத்தான் எனது நாட்டிற்
      புகுத்தியுளான் எனுஞ்செய்தி இன்று கேட்டேன்;
தேர்ப்படையால் வாட்படையால் எதிர்த்தா னேனும்
      செருக்கடக்கிப் படைமடக்கிப் பிறக்கிட் டோடத்
தார்ப்புரவி செலுத்திப்போர் வென்று மீள்வேன்;
      தரியலரைச் சிதறடித்துக் கொன்று மீள்வேன்’.198

என்னுஞ்சொற் செவியுறலும் மலர்வி ழிக்குள்
      இருக்கின்ற புனலெல்லாம் சோர விட்டாள்;
வன்னெஞ்சன் தோள்தழுவி விரிந்த மார்பில்
      மலர்முகத்தைப் பதியவைத்து விம்மி நின்றாள்;
கன்னெஞ்சன் எனினுமவன் காதற் செல்வி
      கண்ணீரால் கரைந்திளகி இரக்கங் கொண்டு,
‘மின்னுஞ்சேல் விழியுடையாய் என்ன கண்டு
      விம்முகின்றாய் வெம்புகின்றாய்? நிமிர்க! என்றான்.199


பிறக்கிடல் - முதுகுகாட்டல், தார் - முன்னணிப்படை சேல் - கயல்மீன்