‘உறவுக்குத் துணையானான் இன்பந் தந்தான் உழல்கின்ற பிரிவுக்கும் துணையாய் நின்றான்; வரவுக்கு வழிநோக்கி ஏங்கும் என்றன் வாழ்வுக்கு மலர்ச்சிதர வரும்நாள் என்றோ? நறவுக்குச் சுற்றிவரும் வண்டே போல நாள்முழுதும் எனைச்சுற்றிச் சுற்றி நின்றான் செருவுக்குப் போய்விட்டான் தவிக்க விட்டுச் செயலிழந்து துயிலிழந்து புலம்ப விட்டு.211 மறைக்கின்றேன்; இந்நோயைப் பிறர்க்கு ணர்த்த மாட்டாமல் தவிக்கின்றேன்; ஆயி னுந்தான் இறைக்கின்ற நீர்போல ஊறி ஊறி ஏறுவதைக் காண்கின்றேன்; நட்பா லன்பு சுரக்கின்ற என்னிடமே இதுசெய் தாரேல் சூழ்பகைமை கொண்டோரை என்செய் வாரோ? பிறைக்கொன்றும் நுதலார்தம் பிரிவால் நேரும் பெருந்துயரம் ஆடவர்க்கு வாரா தேயோ?212 காதலரைக் கூடிமகிழ் பொழுதி லின்பம் கடல்போலப் பெரிதாகும்; பிரிந்து விட்டால் வேதனையோ கடலைவிடப் பெரிதாய்த் தோன்றும்; வீரரவர் என்னோடு பயிலும் போதும் போதனைய என்விழிகள் துயில வில்லை; போர்புரியக் கருதியவர் பிரிந்து விட்டார் ஆதலினால் இன்றுமவை துயில வில்லை; அன்றவைதாம் கண்டதின்பம்; இன்றோ துன்பம்!213 ஊரெல்லாம் உறைபவரைத் துயிலப் பண்ணி, ஒருதனிமைக் கஞ்சியஇவ் விரவுப் போது பாரெல்லாம் தேடியொரு துணைகா ணாமல் பாவையெனைத் துணையாகக் கொண்ட தேயோ? போரெல்லாம் வென்றவரென் னுடனு றைந்த பொழுதெல்லாம் வெகுவிரைவில் இரவு செல்லும்; வேரெல்லாம் வீழ்த்ததுபோல் நிலையா யின்று விடியாமல் நெடுநேரம் தங்கிக் கொல்லும்.214
செரு - போர். வேர் வீழ்த்தல் - வேர்விடுதல். |