பக்கம் எண் :

350கவியரசர் முடியரசன் படைப்புகள் - 7

உள்ளத்தால் உவந்தென்னை விழையா ராகி
      உண்மைஎன நம்பும்வணம் சொல்லால் மட்டும்
கள்ளத்தால் காதலித்த கள்வ ரைத்தான்
      காணத்தான் போகத்தான் துடிக்கும் கண்ணை
எள்ளத்தான் வெறுக்கத்தான் நினைவு தோன்றும்;
      இருவிழியும் துயிலைத்தான் எய்தி நின்றால்
மெள்ளத்தான் வருங்கனவில் அவரைக் கண்டு
      விளம்பிடுவேன் துயரைத்தான் துயிலே இல்லை.215

சிலபொழுது செயலிழந்து விழிகள் சோரும்;
      சிறியஒரு கனவுவரும்; கனவில் என்றன்
குலமகனும் தொடவருவான்; ஆர்வத் தோடு
      கொடுந்துயரைச் சொலஎழுவேன் மறைந்து போவான்;
நலமழியும் என்தோளில் உறைந்தி ருப்பான்
      நனவுடைய கனவதனில்; விழித்து நோக்கின்
புலனறிய முடியாமல் நெஞ்சுக் குள்ளே
      போய்ப்புகுந்து கொள்கின்றான்; யாது செய்கேன்?216

தென்றலுனக் கென்னபிழை செய்து விட்டேன்?
      தீயாக வீசுகின்றாய்; கொழுநர் ஓர்நாள்
முன்றிலிடத் தருகிருந்து காதல் கொண்டென்
      முகத்தெழிலைப் புகழுங்கால் நிற்ப ழித்தார்
என்றதற்கோ முழுநிலவே நெருப்பே போல
      எரிகின்றாய் சொரிகின்றாய் அனலை அள்ளி;
கொன்றொழித்தாற் குற்றமிலை கொல்லா தென்னைக்
      குற்றுயிராக் கிடத்திடவோ விரைந்து வந்தாய்?217

மருண்மாலைப் பொழுதேநீ அளிக்கத் தக்காய்;
      மங்கும்நிலை உனக்களித்த மாயன் யாரோ?
அருண்மாலை எனக்களித்த காதல் மன்னன்
      அயலாகிப் பிரிந்ததனால் மங்கி என்றன்
உருமாறி நிலைமாறிக் கலங்கு கின்றேன்;
      உனக்கொருவன் இவ்வண்ணம் செய்தான் போலும்;’
பொருண்மாறித் தடுமாறி இவ்வா றாகப்
      பொழுதெல்லாம் புலம்புவதே தொழிலாக் கொண்டாள்.218


எள்ள - இகழ, நிற்பழித்தார் - நின்னைப்பழித்தார். அளிக்க - இரங்க. அருள்மாலை - அன்புமயக்கம்.