பக்கம் எண் :

வீரகாவியம்351

இயல் - 49

ஆற்றுக என்றனள் ஆருயிர்த் தோழி;
ஏற்றிலள் அவள்மொழி இரங்கினள் வேல்விழி

பொழுதனைத்தும் புலம்புகிற மங்கை நெஞ்சைப்
      புரிந்தவளாம் தோழிவந்து, ‘கருக்கொள் போழ்தில்
அழுதிருத்தல், உணமறுத்தல், துயில்வெ றுத்தல்,
      அழகாமோ? பிரிவுதரும் துயரந் தாங்கித்
தொழுதிருத்தல் மங்கையர்க்குக் கடனே யன்றோ?
      தூமொழிநீ சிறுமகவோ? மனத்தில் வைகும்
பளுவகற்று! பாலகனை எண்ணி நின்றன்
      பரிதவிப்பை விடுபேதாய்!’ எனக்க டிந்தாள்.219

‘கலங்குகிற எனைக்குறைகள் கூறு கின்றாய்!
      காதலியைக் கைவிட்டுப் பிரிந்து சென்று
கலங்கும்வணம் செய்தானே அவனை நீதான்
      கடுகளவும் குறைசொல்லிப் பழித்தா யல்லை!
இலங்கிழையே! பரிவுடனே ஒருசொற் சொல்லி
      இனைவுறுமென் பாலருளித் தூது விட்டால்
வலங்கெழுமும் வேழற்குக் குறைந்தா போகும்?
      வஞ்சகற்கு வாயென்ன நொந்தா போகும்?220

தண்ணளியொன் றில்லானைத் தறுக ணானைத்
      தணிப்பரிய துயர்தந்து தணந்து சென்ற
கண்ணலனைச் சொல்வதற்கிங் கெவரு மில்லை;
      கடிந்துரைக்க நானொருத்தி தான்கி டைத்தேன்;
எண்ணரிய தீவினையை நோவ தல்லால்
      எவரிடம்போய் முறையிடுவேன்’ என்ற ரற்றிப்
பண்ணமுத மொழியுடையாள் நொந்து கொண்டாள்
      பாருலகை வெறுத்தவள்போல் உயிர்த்து நின்றாள்.221


பளு - சுமை. இனைவுறும் - வருந்துகின்ற. தணந்து - பிரிந்து. கண்ணலன் - கருணையிலான் உயிர்த்து - பெருமூச்செறிந்து.