பக்கம் எண் :

352கவியரசர் முடியரசன் படைப்புகள் - 7

இயல் - 50

வேழனைப் பழித்த தோழியை மறுத்து
வேல்விழி புகழ்மொழி விளம்பினள் உருத்து

பொறுமையுடன் கேட்டிருந்த தோழி நெஞ்சுட்
      புன்னகைத்து வேல்விழிக்குத் தகுந்த வண்ணம்
மறுமொழிகள் புகல்வதுபோற் பொய்ம்மை யாக
      மாவேழன் இயல்பதனைப் பழித்து ரைத்தாள்;
‘தறுகணன்பால் தண்ணளியும் இருக்கும் என்றால்
      தாவுமுயற் குட்டிக்கும் கொம்பி ருக்கும்;
வெறியனவன் போருக்கே உரிய னாவான்
      விளங்கிழையார் காதலுக்குத் தகுதி யாகான்.222

தினவெடுத்த திண்டோளன்; கண்ணும் மண்ணும்
      தெரியாமற் சமர்விளக்கும் கூர்வாய் வாளன்;
சினமடுத்த மடங்கலெனக் கூச்சல் செய்வான்
      சிந்தையிலே மென்மைக்கோர் இடந்தான் உண்டோ?
கனவகத்தும் மெல்லியல்நின் துயரங் காணான்;
      கடுந்துயரக் கடலுக்குள் தள்ளி விட்டான்;
புனமடுத்த களிறனையான் மனமே யில்லான்;
      பொய்யனவன்’ எனஅவனை இயற்ப ழித்தாள்.223

‘என்பால்நீ கொண்டிருக்கும் அன்பால் என்றன்
      இன்பத்துத் தலைமகனை இகழேல் தோழி!
வன்பாகவ் வினியானைக் கருணை யில்லான்
      வஞ்சமுளான் என்றெல்லாம் பழிகள் கூறேல்;
மென்பாலால் பிரிவதனைத் தாங்கும் ஆற்றல்
      மேவாத தென்குற்றம்; வலிய னேனும்
அன்பாலே தலையளிகள் புரிந்த வெல்லாம்
      அறிவாயோ நீதோழி! அவனென் செய்வான்?224


பினற்றுகின்ற - புலம்புகின்ற