பக்கம் எண் :

354கவியரசர் முடியரசன் படைப்புகள் - 7

இயல் - 51

பத்துத் திங்கள் முற்றிய பின்னர்
முத்துப் பிள்ளை பெற்றனள் அவளே.

‘பிரிந்தவனும் இவண்வருவான்; திங்கள் நான்கில்
      பேரெழிலாய் மகன்வருவான்; பிரிவுத் துன்பம்
இரிந்தொழியக் கண்டின்பக் கடலுள் மூழ்கி
      எந்நாளும் திளைத்திருப்பேன்’ என்ற எண்ணம்
விரிந்துளத்திற் பொருந்துவதால் துயரந் தாங்கி
      விரிதோகை மயிலனையாள் களித்தி ருந்தாள்;
சரிந்துமணி வயிறணிந்து மாதம் பத்துச்
      சரியாக நிறைந்துவர வயவு கொண்டாள்.226

இடைவலியால் அவளுழன்றாள்; அவ்வ யாவால்
      இணர்க்கொடிபோல் துவண்டுதுவண் டரற்றிநின்றாள்;
உடைநெகிழ வெய்துயிர்த்தாள்; வியர்த்தாள்; வாயால்
      ஓவென்று குரலிட்டாள்; ஓங்கிக் கட்டில்
அடைவுறுமெல் லணையின்மே லடித்துக் கையால்
      அதனைமிகப் பிசைந்தயர்ந்தாள்; மஞ்சம் பற்றிப்
பெடைமயிலாள் உடல்தளர்ந்து நெளிந்தாள்; பிள்ளை
      பெறுவதன்முன் தாயர்படுந் துயரம் என்னே!227

காதலனைக் கூடுங்கால் இன்பங் கண்டாள்;
      கருவுற்ற நாள்முதலா உயிர்க்குங் காறும்
வேதனைகள் பலகொண்டாள்; இன்ப துன்பம்
      வியனுலகில் மாறிவரும்; இயற்கை ஈதே;
மாதவளும் துன்புற்ற பின்னே என்றும்
      மாறாத இன்பத்தைப் பெற்றெ டுத்தாள்;
போதவிழும் மலர்முகத்தாள் தாய்மை கொண்டாள்
      பூங்கொடியில் அரும்பொன்று பூக்கக் கண்டாள்.228


இரிந்து - நீங்கி. வயவு - பேறுகாலத்துயர். பெடைமயில் -பெண்மயில்.