வரைந்திருத்த கொழுநரெனை வரைந்து சென்ற வாட்டமினுந் தணியவில்லை; வேர்கொண் டோங்கும் அருந்துயரம் சிறிதேனும் அறுந்து போக ஆற்றுமிவன் முகங்கண்டு வாழு கின்றேன்; மருந்தனைய இவனையும்நான் பிரிந்து விட்டால் மாய்தலன்றி வேறில்லை; என்றன் வாழ்வின் குருந்தனைய மலர்முகனைச் சுமந்து பெற்ற குலமகனை எவ்வணம்நான் பிரிந்து வாழ்வேன்?234 தன்மகனைப் பெருவீரன் ஆக்கு தற்கே தணியாத விருப்புடையான்; அதனால் என்றும் வன்மைமிகு போர்முறையே பயிற்று விப்பான்; வளர்ந்துவிடின் இவனுமவன் போல நாளும் கொன்முறைய போர்க்களமே குடியாக் கொள்வான்; கொடியிடையாள் ஒருத்தியிவன் மனையாய் வந்தால் என்னிலைபோல் அவள்நிலையும் ஆகும்; பாவம்! என்தந்தாய் உண்மைநிலை சொல்ல வேண்டா.235 பெண்மகவு பிறந்ததெனப் பொய்ம்மை ஒன்று பேசுவதால் குற்றமிலை; யார்க்குந் தீங்கு முண்ணுனியின் அளவேனும் விளைவ தில்லை; மொழியினொரு புரைதீர்ந்த நன்மை வாய்க்கும்; கண்மணியை என்னுயிரைக் காப்ப தென்றால் களம்வதியும் காதலர்க்குத் தயக்க மின்றிப் பெண்மகவே பிறந்ததென்று செய்தி சொல்லிப் பேதைமனம் தளிர்ப்பதற்கோர் உய்தி நல்கு!,236 என்றிறைஞ்சி நின்றாளை இரங்கி நோக்கி ‘என்மகளே நின்மனம்போற் செய்வேன் அஞ்சேல்; உன்றனுள மகிழ்வன்றி வேறொன் றில்லேன்; உன்மகனை நின்வயமே இருக்கச் செய்வேன்; கன்றினைவிட் டகல்கின்ற ஆவின் தன்மை கனவகத்தும் வாராமல் காத்து நிற்பேன்’ என்றவட்கு மன்னவனும் உறுதி சொல்லி ஏவலரை வேழன்பால் அனுப்பி வைத்தான்.237
வரைந்து - மணந்து குருந்து - குருத்து முண்ணுனி - முள் நுனி. புரை - குற்றம், உய்தி - ஈடேற்றும்வழி. |