பக்கம் எண் :

வீரகாவியம்359

சின்னத்தை விழைவதைத்தான் அன்றே அந்தச்
      சிறுவன்செயல் ஒவ்வொன்றும் காட்டி நிற்கும்;
பொன்னொத்த உடலழகன் வலிமை யோடு
      புரிகின்ற அனைத்திலுமே முதன்மை கொள்வான்.240

பாய்ந்தோடும் விரைவுக்குப் புரவி தன்னைப்
      பாருலகம் பொருளாக எடுத்துக் காட்டும்;
சாய்ந்தாடும் உளைப்பரிதான் இவனைச் சேர்ந்து
      தன்விரைவை வெளிப்படுத்த ஓடுங் காலை
ஓய்ந்தாடும் கால்தளர்ந்தே உருண்டு வீழும்;
      உறுகாற்றிற் கடிதேகி இவனே வெல்வான்;
தோய்ந்தாடும் பருவத்துச் செயல்க ளெல்லாம்
      சொல்லரிய வியப்பினையே தந்து நிற்கும்.241

விளையாட்டுப் பருவமொரு சிறிதே ஏக,
      விறன்மிகுத்த இளங்காளைப் பருவம் வந்து
முளைகாட்டி முகிழ்த்திருக்கத் தோளும் மார்பும்
      முகமலரும் விழியிணையும் பொலிந்து நல்ல
களைகூட்டி நிற்க, உடல் தோற்றந் தானும்
      கட்டிளமை கொண்டிலங்கக் கோட்டு வெற்பின்
முழைகாட்டும் அரியேற்றின் குட்டி போல
      மொய்ம்புமிகு பெருமிதமும் கொண்டு நின்றான்.242

மரஞ்செறிந்த காடடர்ந்து விளங்கி ஓங்கும்
      மலைச்சரிவில் இளைஞரொடு வேட்டம் போகி
உரஞ்செறிந்த விலங்கினத்தை எதிர்த்துக் கொல்ல
      உவகையோடு திரிதருவான்; இவனைத் தாக்க
முறஞ்செவிய களிறுகளும் முழக்கங் காட்டும்
      மொய்யுளைய அரியினமும் வருதல் காணின்
குறிஞ்சியகம் எதிரொலிக்க இடிபோல் ஆர்த்துக்
      குதித்தவற்றின் மேற்பாய்ந்து கொன்று மீள்வான்243


உளை - பிடர்மயிர். முழை - குகை. மொய்உளைய - மொய்த்த பிடரிமயிரிளையுடைய. குறிஞ்சியகம் - மலையகம்,