366 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 7 |
இயல் - 56 படைதிரட்டி மூவகத்தை வெற்றி கொள்வேன் பரியொன்று வேண்டுமென மைந்தன் கேட்டான். ‘என்மதலாய்! உனையொன்று வேண்டு கின்றேன்; இவ்வுண்மை தனைஎவரும் உணரா வண்ணம் நின்மனமாம் சிறையகத்து வைக்க வேண்டும் நின்னையும்நான் பிரிந்திருக்கச் சிறிதும் ஒவ்வேன்; வன்மனங்கொள் கனகனுக்கும் நின்தந் தைக்கும் வளர்ந்துவரும் குலப்பகைமை நெடுநா ளுண்டு; நன்மையிலான் பழிவாங்க நினைத்தல் கூடும்; நாடோறும் விழிப்புணர்வோ டிருத்தல் வேண்டும்.’261 இவ்வண்ணம் முன்னிகழ்ச்சி அனைத்துஞ் சொன்ன ஏந்திழையாள் திருவடிக்கு வணக்கஞ் செய்து, ‘மெய்வண்ணம் என்வரலா றுரைத்த அன்னாய்! மேவலர்தாம் நமக்கினிமேல் எவரு மில்லை; கைவண்ணங் காட்டிடுவேன்; தந்தை போலக் களங்களெலாம் போய்ப்புகுந்து வெற்றி கொள்வேன்; செய்வண்ணம் அறிந்துலகம் புகழும் போது தெரியாமல் என்னிலைதான் மறைந்தா போகும்? 262 எத்துணைதான் மறைத்தாலும் என்றன் போக்கால் என்றேனும் வெளிப்படுதல் திண்ணம்; காட்டை நத்துபுலிக் குட்டியின்பால் பூனைப் பண்பை நயப்பதனால் பயனில்லை; எனினும் என்றன் அத்தனைநான் காணும்வரை அடக்கிக் கொள்வேன்; அன்னாய்நீ அஞ்சற்க! திட்ட மிட்டே இத்தரையில் படைதிரட்டி வாகை சூடி இணையாரும் இல்லைஎன வாழ்வேன் அம்மா!263 |