பக்கம் எண் :

384கவியரசர் முடியரசன் படைப்புகள் - 7

இயல் - 66

வஞ்சனை யுளத்தோடு வஞ்சியவ் வீரனைக்
கெஞ்சிவெண் ணகர்க்கண் வந்தருள் என்றனள்.

சூழ்ந்தொன்று சிறையிருந்து தப்பிச் செல்லத்
      தோகைமனங் கொண்டவளாய்த் தன்மு கத்தைச்
சூழ்ந்துள்ள திரையதனை நன்க கற்றிச்
      சூரனையோர் கடைவிழியால் உற்று நோக்கத்
தாழ்ந்தநெடுங் கருங்குழலும், எள்ளின் மூக்கும்,
      தண்ணியநற் பிறைநுதலும், புருவ வில்லும்,
ஆழ்ந்தபொருட் குறிப்புணர்த்தும் அகல்வேற் கண்ணும்
      அரியேறு கண்டுளத்தை அவள்பால் தந்தான்.302

‘முறுவலுக்கு முகந்தந்த மறவ ரேறே!
      முனைமுகத்துப் பலமறவர் பொருதார் என்பாற்
புறமளித்துச் செலக்கண்டேன் முன்னர்; இன்றோ
      புலியனையாய்! எனைவென்றாய்; போரில் வெல்லும்
திறமுனக்குப் பெரிதெனினும் என்போற் பெண்ணைச்
      சிறைசெய்தாய் வென்றுவிட்டாய் என்று சொன்னால்
வரவுனக்குப் பழியல்லால் புகழே யில்லை;
      வாய்மையிது; நினையினது வீர மில்லை.303

பெண்ணோடு பொருதுயர்ந்தான் வெற்றி பெற்றான்
      பிறங்குபுகழ் வீரமொடு கொண்டான் என்று
மண்ணாடு சொலும்விருது பெறுவ தற்கோ
      மனம்வைத்தாய்; மாதென்னைச் சிறையில் வைக்க
எண்ணாதே; விட்டுவிடு; நினதே வெற்றி;
      எங்கட்கும் பணிவதுதான் கடமை யாகும்;
நண்ணாரென் றெண்ணாமல் இனிமேல் எங்கள்
      நகருக்குள் நீவருக! நலமே வாய்க்கும்.304


முறுவல் - புன்னகை. பிறங்கு - விளங்கு, விருது - சிறப்பு