பொரவந்த வெண்கோடன் சிறையுற் றேகப் புதுத்தலைமை என்தந்தை பெற்றார் அன்றே; கரவில்லை; முதியரவர் என்சொற் கேட்பர் கன்னிஎன்பேர் மானத்தி என்பர்; நெஞ்சில் உறவந்த நட்புறவால் என்பின் வந்தால் உரியதொரு கோட்டையினை ஒப்ப டைப்பேன்; பிறகிந்தச் சமரெதற்கு வாவா’ என்று பெடைக்குயிலின் இனியகுரல் கொண்டு சொன்னாள். 305 அவளெய்த வில்லம்பு தடுத்து நின்றோன் ஆயிழையின் விழியம்பு தடுக்க லாற்றான்; தவளநகைப் பொலிவுடனே இனிய சொல்லும், தனிநடையும், கொடியிடையும், நயஞ்செ றிந்து தவழுமொழி வாயழகும், வீரப் போக்கும் தறுகணுறுங் கோளரியை வென்று நிற்க, இவனுமவ ளுடன்செல்ல இயைந்தா னாகி எழில்வீரக் குலமகள்பாற் சிலசொல் சொல்வான்.306 ‘மறவர்குலப் பூங்கொம்பே! நயந்து சொல்லும் மாற்றத்தை நம்புகிறேன்; மாற்றம் செய்யேல்; சிறகிழந்த பறவைஎன நிற்கு முன்னைச் சிறைதவிர்த்தேன் சொன்னசொலைக் காத்தல்வேண்டும் உறநிவந்த கோட்டையினை அட்டி யின்றி ஒப்படைத்துச் சொற்கேட்டுப் பணிதல் வேண்டும்; பிறழுநிலை தென்படுமேல் எனது சீற்றம் பேரழிவைச் செய்துவிடும் எழுக’ என்றான்.307
கரவு - வஞ்சனை, தவளம் - வெண்மை, தறுகண் - அஞ்சாமை. மாற்றம் - சொல், மாற்றம் - மாறுபாடு. உறநிவந்த - மிகஉயர்ந்த. |