பக்கம் எண் :

வீரகாவியம்387

இயல் - 68

தையல் அவள்தான் தப்பிப் புகுந்தாள்
மையல் கொண்டோன் வஞ்சினம் மொழிந்தான்

ஓங்குநிலைப் பெருவாயிற் கோட்டை முன்னர்
      ஓடிவரும் மானத்தி நிலைமை கண்டே
ஆங்குறுவோர் பெருங்கதவைத் திறந்து விட்டார்;
      அரிவையத னுட்பாய்ந்து புகுந்து கொள்ள
வீங்குநெடுங் கதவதனை மூடிக் கொண்டார்;
      வீரமகன் அதுகண்டு வெளியில் நின்றே
ஏங்குமனத் துயரத்தைத் தாங்கி நின்றான்;
      ஏமாற்றம் பெற்றமைக்கு நாணி நின்றான்.310

உட்புகுந்த அம்மகளும் மதின்மே லேறி
      ஒருமகனாய் நிற்போனை விளித்து நோக்கிக்
கட்கமுடன் நிற்போய்நின் நாடு நோக்கிக்
      கடிதுவிரைந் தோடுகநீ!‘ என்றாள் மங்கை;
வெட்கமுடன் பெருஞ்சினமும் கொண்ட காளை
      ‘விரகுபுரிந் தெனைப்பழித்தாய்! பிழைத்தாய்! நாளை
மட்புகுந்து தூளாகும் நினது கோட்டை;
      மாயத்தாய்! நின்னுடலும் கரியாம் தீயில்.311

நரிகண்டு பின்வாங்கச் சூழ்ச்சி செய்த
      நயவஞ்சப் பேய்மகளே! என்றன் நெஞ்சை
வெறிகொள்ளச் செய்துவிட்டாய்! நாளை நேரும்
      விளைவுகளை உணராமல் விதைத்து விட்டாய்!
கரிகொண்டு பரிகொண்டு படைகள் கொண்டு
      காத்தாலும் என்சினத்தைத் தடுக்கல் ஆற்றாய்!
எரிகொண்டு வாயிலெலாம் தீயும்; எங்கள்
      இடிகொண்டு கோட்டைஎலாம் சாயும்’ என்றான்.312


கட்கம் - வாள். விரகு - தந்திரம்.