இயல் - 68 தையல் அவள்தான் தப்பிப் புகுந்தாள் மையல் கொண்டோன் வஞ்சினம் மொழிந்தான் ஓங்குநிலைப் பெருவாயிற் கோட்டை முன்னர் ஓடிவரும் மானத்தி நிலைமை கண்டே ஆங்குறுவோர் பெருங்கதவைத் திறந்து விட்டார்; அரிவையத னுட்பாய்ந்து புகுந்து கொள்ள வீங்குநெடுங் கதவதனை மூடிக் கொண்டார்; வீரமகன் அதுகண்டு வெளியில் நின்றே ஏங்குமனத் துயரத்தைத் தாங்கி நின்றான்; ஏமாற்றம் பெற்றமைக்கு நாணி நின்றான்.310 உட்புகுந்த அம்மகளும் மதின்மே லேறி ஒருமகனாய் நிற்போனை விளித்து நோக்கிக் கட்கமுடன் நிற்போய்நின் நாடு நோக்கிக் கடிதுவிரைந் தோடுகநீ!‘ என்றாள் மங்கை; வெட்கமுடன் பெருஞ்சினமும் கொண்ட காளை ‘விரகுபுரிந் தெனைப்பழித்தாய்! பிழைத்தாய்! நாளை மட்புகுந்து தூளாகும் நினது கோட்டை; மாயத்தாய்! நின்னுடலும் கரியாம் தீயில்.311 நரிகண்டு பின்வாங்கச் சூழ்ச்சி செய்த நயவஞ்சப் பேய்மகளே! என்றன் நெஞ்சை வெறிகொள்ளச் செய்துவிட்டாய்! நாளை நேரும் விளைவுகளை உணராமல் விதைத்து விட்டாய்! கரிகொண்டு பரிகொண்டு படைகள் கொண்டு காத்தாலும் என்சினத்தைத் தடுக்கல் ஆற்றாய்! எரிகொண்டு வாயிலெலாம் தீயும்; எங்கள் இடிகொண்டு கோட்டைஎலாம் சாயும்’ என்றான்.312
கட்கம் - வாள். விரகு - தந்திரம். |