பக்கம் எண் :

வீரகாவியம்389

இயல் - 69

கோளரியின் வஞ்சினத்தைக் கேட்டோர் அஞ்சிக்
கூடியொரு சுருங்கைவழி தப்பிச் சென்றார்.

வெஞ்சினத்தான் வெகுண்டுரைத்த வஞ்சி னத்து
      வீரமொழி மானத்தி தந்தைக் கெட்ட,
அஞ்சுளத்து முதியனவன் காளை நாளை
      அணுகுமுனம் வழிதேட வேண்டு மென்று
நெஞ்சகத்துச் சிந்தித்தான் வழியுங் கண்டான்;
      நினைத்தவெலாம் தொகுத்தொருங்கே வரைந்த ஓலை
கஞ்சுகத்து மறவன்பால் தந்து, நாட்டுக்
      காவலன்பால் தருகவெனப் பணித்த பின்னர், 316

மற்றவரை அழைப்பித்து நிலைமை கூறி,
      ‘மாற்றலர்பாற் சிக்காமல் தப்பிச் செல்ல
உற்றதொரு சுருங்கைவழி புக்குச் செல்லின்
      ஊர்கடந்து மூவகத்தை அடைத லாகும்;
சொற்றபடி வஞ்சினத்தை முடிக்கும் ஆற்றல்
      சூரன்பால் உளதறிவீர்; இதை விடுத்தால்
முற்றுமழிந் தொழிந்திடுதல் உறுதி’ என்றான்;
      மொழியுமுனம் எல்லாரும் சுருங்கை புக்கார். 317


வஞ்சினம் - சபதம், அஞ்சுளம் - அஞ்சும் உள்ளம், கஞ்சுகம் - சட்டை நாட்டுக்காவலன் - மதலைக்கோ.
சுருங்கை - சுரங்கம்.