| 390 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 7 |
இயல் 70 மறுநாள் கோட்டை வாயிலுட் புகுந்தோன் பொருவாள் விழிமகட் கண்டிலன் புலம்பினன். துயிலரசு செயுமிரவு புறந்தந் தோடத் துதையிருளின் வாய்பிளந்து கதிரோன் தோன்ற அயிலரசின் இலைவேலான் படைதி ரட்டி ஆர்ப்பரித்து வெண்கோட்டை வாயில் சார்ந்தான்; எயில்வளையும் நெடுங்கதவின் வாய்பி ளக்க இடித்ததனுட் புலிபோலப் பாய்ந்து சென்றான்; பயில்பவரங் கொருவருமே காணா னாகிப் பகரரிய ஏமாற்றங் கொண்டு நின்றான்.318 காணாருங் கேளாருங் கூனர் தாமும் கைகால்கள் முடமாகிச் செயல்செய் யாரும் பேணார்தங் கோட்டைக்குள் இருக்கக் கண்டான்; பேருலையின் வெய்துயிர்த்தான்; வீரம் ஒன்றே பூணாகக் கொண்டவளைத் தனது நெஞ்சுட் புக்கதனைக் கவர்ந்தவளைத் தேடித் தேடிக் காணாமல் பதைபதைத்தான்; ஏதோ ஒன்று கவ்வியது போல்மனத்தில் துடிது டித்தான்.319 இகழ்ந்துரைத்த மாற்றமெல்லாம் மறந்து போனான்; எழிலணங்காம் அவள்மீது மையல்ஆனான்; திகழ்ந்திருக்கும் அவளழகில் சொக்கி நின்று சிறைப்பட்டான் இவனன்றி அவளோ இல்லை; அகன்றிருக்கும் நெடுவேலால் காயம் செய்தான் அவள்மார்பில்; அஃதாற மருந்தும் உண்டு; வகிர்ந்திருக்கும் வடுவிழியால் பட்ட காயம் மாறுதற்கு மருந்தின்றித் தவித்தி ருந்தான்.320
துதை - செறிந்த, அயில் - கூரிய, அரசின்இலை - அரசமரத்திலை, எயில் - மதில், பயில்வர் - வாழ்பவர். உலையின் - உலையைப்போல. |