பக்கம் எண் :

392கவியரசர் முடியரசன் படைப்புகள் - 7

இயல் - 71

மானத்தி நினைவதனால் வாடு வோனை
மாவலியன் இடித்துரைத்து மறக்கச் சொன்னாள்.

விடையெதுவும் துயருறுவோன் தாரா னேனும்
      விழைந்ததனைப் பளிங்கேபோல் எடுத்துக் காட்டும்
விடையனையன் முகத்துறுப்பால் கண்டு கொண்டான்;
      ‘வீரநினக் கொன்றுரைக்கக் கடவன் கேண்மோ!
கடைவிழியிற் கட்டுறுத்தும் மகளிர் கொண்ட
      கட்டழகும் பற்றுளமும், இன்று பூத்து
நடைமுறையில் இதழ்விரித்து நாளை வாடும்
      நலமுடைய மலரனைய இயல்பே கொள்ளும்.322

போர்விழைவோர் காதலெனும் மலருள் மூழ்கிப்
      பொன்றிவிழும் வண்டாகார்; போரில் வெற்றித்
தார்விழையும் நினைவுடன்தான் ஈங்கு வந்தோம்;
      தையலரால் கடன்மறந்து திரிதல் நன்றோ?
கார்விழையும் கூந்தலுக்கு மயங்கி நின்றோர்
      கடும்போரை வென்றதிலை; உண்மை வீரர்
ஏர்விழையும் காமமெனும் வலையிற் சிக்கி
      இடருக்குள் தாமேபோய் வீழ்ந்து சாகார்.323’

தலைவனென உனைநம்பி வந்தோம்; இங்குத்
      தரியலர்தம் நாட்டழகி ஒருத்திக் காக
அலையுமனம் நீகொண்டாய்! மூவ கத்தை
      அருஞ்சமரில் வென்றுவிடின் அதன்மேல் நீதான்
கலையுலகம் புகுந்திடலாம்; காதல் வாழ்வில்
      களித்திருந்து திளைத்திடலாம்; தடுப்பா ரில்லை;
மலைவரிய கோளரியின் வீர மெல்லாம்,
      மாண்பெல்லாம் வீணாகப் போதல் நன்றோ?324


ஏர் - அழகு, மலைவரிய - எதிர்க்க முடியாத